3 தொகுதி வாக்காளர் பட்டியலில் கெஜ்ரிவால் பெயர்- தேர்தல் ஆணையம் விசாரணை
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் டெல்லி உட்பட 3 தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஹிபாபாத், டெல்லி சீமாபுரி, புது டெல்லி ஆகிய மூன்று தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, தேர்தல் விதிகளை மீறியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரி வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய்தேவ் கூறுகையில், கெஜ்ரிவால் மீதான புகார் தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாக வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம்.
இது தொடர்பான விசாரணை அறிக்கையை இரு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு டெல்லியில் உள்ள 2 தொகுதிகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.