மேற்கு வங்கம் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு - மமதா பாதுகாப்பு அதிகாரி உள்பட பலர் அதிரடி இடமாற்றம்
மேற்கு வங்க மாநிலத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ள நிலை பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் அங்கு பல அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் மமதாபானர்ஜியின் பாதுகாப்பு அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கமாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமையுடன் ஓய்ந்தது.
தேர்தல் பிரசார விதிமீறல் தொடர்பாக மமதா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸ்களுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார் மமதா பானர்ஜி. தேர்தல் ஆணையம் பாஜகவின் தூண்டுதலின் பேரில் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள மமதா,வாக்குப்பதிவு நாளில் பிரதமர் பிரசாரம் செய்கிறாரே, இது தேர்தல் நடத்தைவிதிகள் மீறல் இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்க மாநிலத்தின் பாதுகாப்பு இயக்குநரக அதிகாரி அசோக் சக்கரவர்த்தியை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதே போல 3 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநில தலைமைச் செயலளருக்கு எழுதிய கடிதத்தில் உடனடியாக இந்த இடமாற்றம் அமலுக்கு வருவதாகவும் இந்த அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பாக எந்த பணியும் வழங்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா ஒரேநாளில் 59ஆயிரம் பேர் பாதிப்பு - 301 பேர் மரணம்
மூன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளைத் தவிர, மேலும் பல அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டோலிகஞ்ச் சட்டசபைத் தொகுதியின் கீழ் வரும் ரீஜண்ட் பார்க் மற்றும் பாஸ்டிரோனி காவல் நிலையங்களின் பொறுப்பாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். ரீஜண்ட் பூங்காவின் பொறுப்பாளர் ஓ.சி மிருணல்காந்தி முகர்ஜி சிறப்பு கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார் அதே போல பாஸ்டிரோனி ஓ.சி. பிரதாப் பிஸ்வாஸ் கொல்கத்தா காவல்துறை துப்பறியும் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 10ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில் 5ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 17ஆம் தேதியும், 6ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 22 ஆம் தேதியும் நடைபெறும். 7ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியும் 8 வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெறுகிறது. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.