பசு மாட்டு பிரச்சினைக்கு தப்பாத அமர்த்தியா சென்.. மத்திய அரசு மீது கடும் சீற்றம்
அளவு கடந்த அதிகாரத்தின் பிடியில் இந்தியா சிக்கியிருப்பதாக பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கடுமையாக சாடியுள்ளார்.
கொல்கத்தா: பாஜக அரசு நாட்டு நலனைவிட அதிகாரம் செய்வதிலேயே முக்கியத்துவம் காட்டுவதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் கூறியுள்ளார்.
இந்தியப் பொருளாதார வல்லுநரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் பற்றிய ஆவணப்படமான தி ஆர்கியுமண்டேடிவ் இந்தியன் படத்தை சுமன் கோஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படத்தை படத்தை வெளியிடுவதற்காக கொல்கத்தாவில் உள்ள தணிக்கைக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
படத்தை தணிக்கை செய்த தணிக்கை துறை அதிகாரிகள் கடும் கெடுபிடிகளை விதித்துள்ளனர். ஆவணபடத்தில் இடம்பெற்றிருக்கும் 'பசுமாடு', 'இந்துத்துவா', 'குஜராத்', 'இந்தியாவின் இந்துத்துவா பார்வை' உள்ளிட்ட வார்த்தைகளை பீப் செய்யும்படி கூறியுள்ளனர். இந்த வார்த்தைகளை நீக்கினால் மட்டுமே யு/ஏ சான்று கொடுக்க முடியும் என தணிக்கை துறை தெரிவித்துள்ளது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
இயக்குனர் மறுப்பு
படத்தில் இருந்து இந்த வார்த்தைகளை நீக்கினால் அது அர்த்தமற்றதாகிவிடும் என்பதால் அவற்றை நீக்க இயக்குனர் கோஷ் மறுத்துவிட்டார். இதனால் அமர்த்தியா சென் குறித்த படம் மும்பை சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கும் தான் தனது நிலைப்பாட்டில் இதே உறுதியோடு நிற்கப் போவதாக கோஷ் கூறியுள்ளார்.
அதிர்ச்சி
இந்நிலையில் தனது படத்திற்கு தணிக்கை குழு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமர்த்தியா சென், இந்தப் படம் மிக அருமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இருப்பதாக தணிக்கைக் குழுவினர் கூறுவதைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன்.
அதிகாரத்தின் பிடியில்
இந்த அடாவடி செயல்பாடுகளே நாடு எப்படி அளவு கடந்த அதிகாரத்தின் பிடியில் சிக்கியிருக்கிறது என்பதை சொல்லும், நாட்டிற்கு எது நல்லது என்பதை சொல்லக்கூட சுதந்திரம் இல்லை. நான் வேண்டுமென்றே குஜராத், இந்துத்துவா அல்லது பசுமாடு, பசுமாடு என்று என்னுடைய பேச்சில் குறிப்பிடவில்லை. 2002ல் குஜராத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டியே இந்த வார்த்தைகளை பயன்படுத்தினேன்.
அடாவடி ஆளும் கட்சி
தணிக்கைத் துறையினர் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர். அளவு கடந்த அதிகாரத்தின் கைகளில் நாடு சிக்கியுள்ளது. ஆளும் கட்சிக்கு எது சிறந்தது என்று படுகிறதோ அதை நாட்டு மக்கள் மீது திணித்து வருகிறது என்றும் கடுமையாக விமர்சித்தார் சென்.
டாக்குமென்டரியில் என்ன சிறப்பு?
'தி ஆர்கியுமண்டேடிவ் இந்தியன்' ஆவணப் படத்தில் சமூக மாற்றத்திற்கான தியரிகள், மேம்படுத்தப்பட்ட பொருளாதாரம், சித்தாந்தம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் மற்றும் அவரது முன்னாள் மாணவர் பாசு இருவரும் உரையாடுவது போல 2002 மற்றும் 2017ல் இந்த டாகுமென்டரி இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது.
|
மம்தா கண்டனம்
இதனிடையே அமர்த்தியா சென் குறித்த ஆவணப்படம் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவிற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரையும் முடக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக மம்தா கடுமையாக சாடியுள்ளார்.