அன்று பிரஸ் மீட்டில் பாம்பு-இன்று பிறந்த நாளில் அமலாக்கத்துறை ரெய்டு- சிக்கலில் சத்தீஸ்கர் முதல்வர்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலா முதல்வர் பூபேஷ் பாகலின் உதவியாளர்கள், அரசியல் ஆலோசகர் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அமலாக்கத்துறை நடத்தி வரும் இந்த சோதனைக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்பது பொதுவான கருத்து கணிப்பு முடிவுகள்.

சத்தீஸ்கரில் பாஜக தலையெடுக்க முடியாத அளவுக்கு பெரும் தோல்வியைத் தழுவும் என்பது சில கருத்து கணிப்பு முடிவுகள். ஆனால் காங்கிரஸுக்கு சமமான இடங்களை சத்தீஸ்கரில் பாஜக பெறும் எனவும் சில கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இன்று சத்தீஸ்கர் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் தமது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பூபேஷ் பாகலின் பிறந்த நாளிலேயே அவரது உதவியாளர்கள், அவரது அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா உள்ளிட்டோர் வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுபான ஊழலில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக அமலாக்கத்துறை அதிகாரிகளை ஏவிவிட்டு சோதனை நடத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமது பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி கொடுத்தனுப்பிய பரிசாக இதை பார்க்கிறேன் என கிண்டலடித்துள்ளார் முதல்வர் பூபேஷ் பாகல்.
சில நாட்களுக்கு முன்னர் பூபேஷ் பாகல், செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது அவரது காலுக்கு அருகே பாம்பு ஊர்ந்து சென்றது. அதை அவரது உதவியாளர்கள் அடிக்க முயற்சித்தனர். ஆனால் பாம்பை அடிக்க வேண்டாம் என பூபேஷ் பாகல் அறிவுறுத்தி இருந்தார். அந்த பிரஸ்மீட்டில் பாம்பு புகுந்த சகுனம்தான் இன்று அமலாக்கத்துறை உள்ளே நுழைந்துள்ளது என ஒரு புலம்பலையும் அவரது ஆதரவாளர்கள் முன்வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications