டெல்லியில் மன்றாடிப் பார்த்தும் சீண்டாத மோடி... விரக்தியுடன் திரும்பிய எடப்பாடி!
பிரதமர் மோடியை தனியே சந்தித்து கட்சி, ஆட்சி குறித்து பேச நினைத்து எடப்பாடி பழனிச்சாமியின் முயற்சி தோல்வியில்தான் முடிவடைந்தது.
டெல்லி: நிதி ஆயோக் மாநாட்டுக்குப் போன கையுடன் பிரதமர் மோடியை தனியே சந்தித்து மனம்விட்டு சில விஷயங்களை பேசுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சித்தார். ஆனால் பிரதமர் மோடி முகம் கொடுத்தே பேசாததால் விரக்தியுடன் சென்னை திரும்பியுள்ளார் எடப்பாடி.
அதிமுகவின் கோஷ்டிகள் இணைவதற்கான பேச்சுகள் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் நீடித்துக் கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் முதல்வர் பதவியை தக்க வைக்க சிறப்பு யாகங்களுக்கு ஏற்பாடு செய்துவிட்டு டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்துக்கு புறப்பட்டுப் போனார் எடப்பாடி.
நிதி ஆயோக் கூட்டத்தில் கூட மத்திய பாஜக அரசுக்கு வலிக்காத வகையிலேயே பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசினார் எடப்பாடி. இந்த பயணத்தின் போது பிரதமர் மோடியை தனியே சந்தித்து எப்படியும் பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருந்தார் எடப்பாடி.

அதிகாரிகள் முயற்சி தோல்வி
முதல் கட்டமாக தமிழக அரசு அதிகாரிகள் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த முயற்சி படுதோல்வி அடைந்தது.

சதாசிவம் மூவ்
இதையடுத்து கேரளா ஆளுநர் சதாசிவம் மூலமாக பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு காய்கள் நகர்த்தப்பட்டன. இதன் விளைவாக மோடியை சந்திக்க 2 நிமிட நேரம் எடப்பாடிக்கு கிடைத்தது.

முகம் கொடுக்காத மோடி
இச்சந்திப்பின் போது தமிழகம் சார்ந்த கோரிக்கை மனு ஒன்றை மோடியிடம் எடப்பாடி கையளித்தார். ஆனால் பிரதமர் மோடியோ எடப்பாடியிடம் முகம் கொடுத்து கூட பேசவே இல்லையாம்.

விரக்தியில் எடப்பாடி
ஆட்சி, கட்சி தொடர்பாக சில விஷயங்களை பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்திவிட வேண்டும் எனபதற்காக தனியே சந்திக்க நேரம் கேட்டும் நடக்கவில்லை.. நேரடி சந்திப்பின் போதும் கூட பிரதமர் மோடி முகம் கொடுக்கவில்லையே என விரக்தியுடனேயே சென்னை திரும்பிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.












Click it and Unblock the Notifications