காங்கிரசில் உள்ள ஒருவர் தூண்டிவிட்டே என் மீது வழக்கு... புது பஞ்சாயத்தை கூட்டும் இளங்கோவன்
டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒருவர் தூண்டிவிட்டுதான் காமராஜர் அரங்க வணிக வளாக வாடகையில் தாம் மோசடி செய்ததாக வளர்மதி என்ற பெண் வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னைக்கு கடந்த 7-ந் தேதி வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இளங்கோவனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தமிழக அரசும் இளங்கோவன் மீது அவதூறு வழக்குப் போட்டது. இதனிடையே சென்னை காமராஜர் அரங்க வணிக வளாக வாடகையில் இளங்கோவன் மோசடி செய்ததாகவும் அதை தட்டிக் கேட்ட தம்மை உருட்டுக் கட்டையால் தாக்கியதாகவும் வளர்மதி என்ற பெண் புகார் கொடுத்தார்.
இப்புகாரில் இளங்கோவன் கைது செய்யப்படக் கூடும் என கூறப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துவிட்டு டெல்லிக்கு சென்றார் அவர். சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமையன்று முன் ஜாமீன் அளித்த நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை இளங்கோவன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தலைமறைவாக இல்லை
நான் தலைமறைவாக இல்லை. பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டாம் என்று நினைத்தேன். அதனால்தான் சந்திக்கவில்லை.
சில பணிகளை முடிப்பதற்காக, நான் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளேன். எங்கள் தலைவர்களில் சிலரை சந்தித்தேன். தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நிர்வாகிகள் கூட்டம் 2 நாட்களாக நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ளவும் வந்தேன்.

வழக்கை சந்திப்பேன்
தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி, நான் கூறிய கருத்துகள் மீதான சர்ச்சை மற்றும் காங்கிரஸ் அலுவலகத்தில் பணிபுரியும் வளர்மதியின் வழக்கு ஆகிய இரண்டும் பெரிய பிரச்சினை கிடையாது. சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்மணி ஒருவர் என் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இது ஒரு சதவீதம் கூட உண்மை அடிப்படை இல்லாமல் போடப்பட்ட வழக்கு. அதை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திப்பேன்.

பின்னணியில் காங். பிரமுகர் ...
இந்த பிரச்சினை குறித்து யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வளர்மதி என்பவரை தூண்டி விட்டதில் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒருவருக்கு முக்கிய பங்கு இருக்கலாம். பாரதிய ஜனதா கட்சிக்கும் இதில் பங்கு உண்டு.

உரிய பதிலளிப்பேன்..
இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் எனக்கு நோட்டீஸை எங்கே அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரையில் நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். சென்னையில் இருந்தேன். அங்கே கிடைக்கவில்லை. சரியான முகவரிக்கு அனுப்பி, அது எனக்கு கிடைத்தால் அதுபற்றி யோசிக்க முடியும். இதுகுறித்து என் மனைவியிடம் கேட்டேன். வரவில்லை என்று அவர் கூறினார்.

புதிய குற்றச்சாட்டுகள்
சட்டத்தை மதிக்கக்கூடிய இந்தியனாகத்தான் கடைசிவரை இருப்பேன். வளர்மதி பற்றி நான் ஏற்கனவே லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கூறியிருக்கிறேன். இதுதொடர்பான விவரங்களை விரைவில் வெளியிடுவேன்.
இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications