ட்விஸ்ட்.. ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதியை திடீரென மாற்றிய தேர்தல் ஆணையம்.. காரணத்த பாருங்களேன்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான தேதியை திடீரென மாற்றி இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் தேதி மாற்றத்துக்கு பின்னணியில் உள்ள முக்கிய காரணத்தையும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதன் விபரம் வருமாறு:
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தானில் 5 ஆண்டு சட்டசபை காலம் 2024 ஜனவரி மாதம் 14ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.

இந்நிலையில் தான் கடந்த 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தானுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது. அதாவது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோராம், சத்தீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி நவம்பர் மாதம் 23ம் தேதி ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் இன்று சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி கூறியுள்ளது. அதன்படி ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் என்பது நவம்பர் 25ம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சட்டசபை தேர்தல் தேதியை மாற்றியதன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது. அதாவது நவம்பர் 23ம் தேதி என்பது முகூர்த்த தினமாக உள்ளது. ஏராளமான திருமணங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் ஓட்டளிப்பதை தவிர்க்க வாய்ப்புள்ளது. இதனால் தேர்தல் தேதியை மாற்றம் செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்துள்ளன.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து தான் நவம்பர் 23ம் தேதிக்கு பதில் நவம்பர் 25ம் தேதி ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் மாதம் 3 ம் தேதி எண்ணப்பட உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 101 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.
கடந்த 2018 ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து சமாஜ்வாதி மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இந்த முறையும் மாநிலத்தில் காங்கிரஸ்-பாஜக இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை எட்டிப்பிடிக்க பாஜகவும் முயன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications