தேர்தல் பிரச்சாரத்தில் 40 நட்சத்திர பேச்சாளார்களுக்கு மட்டுமே அனுமதி: தேர்தல் கமிஷன் புது உத்தரவு

டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை தேர்தல் கமிஷன் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இம்முறை டெல்லி தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றிற்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனவே, வாக்காளர்களைக் கவர கட்சிகள் நட்சத்திர அந்தஸ்து கொண்ட வி.ஐ.பி. பிரமுகர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப் படுத்தி, தேர்தல் செலவைக் குறைக்க தலைமை தேர்தல் கமிஷன் புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி தேர்தல் கமிஷனால் அங்கீகாரம் பெற்ற அதாவது பா.ஜ.க., காங்கிரஸ், இடது சாரிகள் போன்ற கட்சிகள் தலா 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு மேல் யாரையும் பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளது.
அதேபோல், தேர்தல் கமிஷனில் பதிவு செய்து, அங்கீகாரம் பெறாத கட்சிகள் தலா 20 நட்சத்திர பேச்சாளர்களையே பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் நட்சத்திர அந்தஸ்து பிரமுகர்களின் பிரசார செலவை அரசியல் கட்சிகளே ஏற்க வேண்டும் என்றும், நட்சத்திர பேச்சாளர்கள் யார்-யார் என்ற விவரத்தை நவம்பர் 9-ந் தேதியில் இருந்து ஒரு வாரத்துக்குள் கொடுக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications