நாடாளுமன்றத் தேர்தல்: 6 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு
டெல்லி: நாடு முழுவதும் மொத்தம் ஆறு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
15வது மக்களவையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 1-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மே மாதம் 31-ஆம் தேதிக்குள் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும்.
மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை மார்ச் மாதத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் மொத்தம் ஆறு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
81.4 கோடி வாக்காளர்கள்
மக்களவைத் தேர்தலில் சுமார் 81.4 கோடி பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு பொதுத் தேர்தலை விட 9.7 கோடி புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
1.1 கோடி தேர்தல் பணியாளர்கள்
தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு 1.1 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் பாதி பேர் பாதுகாப்புப் படையினராவர்.
மார்ச் 10க்குள் அறிவிப்பு
மார்ச் 6ம் தேதிக்கு மேல், 10ம் தேதிக்குள் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை ஆணையம் வெளியிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 15க்குள் வாக்குப்பதிவு
மே 15ம் தேதிக்குள் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்றும், இதனால், அடுத்த 2 வாரங்களுக்கு அரசியல் கட்சிகள் புதிய அரசை அமைக்க கால அவகாசம் கிடைக்கும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் செலவு உச்சவரம்பு
மக்களவைத் தேர்தலை பொறுத்தமட்டில், பெரிய மாநிலங்களில் வேட்பாளர் தேர்தல் செலவு வரம்பினை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சமாக உயர்த்த பரிசீலிக்கப்படுகிறது. சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் பெரிய மாநிலங்களில் வேட்பாளர்கள் செலவு வரம்பை தற்போதைய அளவான ரூ.16 லட்சத்தை ரூ.28 லட்சம் என்ற அளவுக்கு உயர்த்த பரிசீலனை நடக்கிறது.
பண்டிகை தினங்கள்
ஏப்ரல் 8ம் தேதி ராமநவமியும், ஏப்ரல் 13,14 தேதிகளில் பைசாகி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. அம்பேத்கார் ஜெயந்தி ஏப்ரல் 14ம் கொண்டாடப்படுகிறது. அதே போல் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏப்ரல் மாதத்தில் பிகூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகை தினங்கள் அல்லாத நாளில் தேர்தல் தேதிகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
3 மாநில சட்டப்பேரவை தேர்தல்
மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிஷா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
2009 மக்களவைத் தேர்தல்
கடந்த மக்களவைத் தேர்தல், 2009-ஆம் ஆண்டில் ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கி மே 13-ஆம் தேதி வரை ஐந்து கட்டமாக நடைபெற்றது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மே 16-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications