துணை ஜனாதிபதி தேர்தல் - வெங்கையா நாயுடு அமோக வெற்றி
துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை:டெல்லி: நாட்டின் 15வது துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. துணை ஜனாதிபதியாக பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடு 272 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
துணை ஜனாதிபதியாக ஹமீன் அன்சாரி 10 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக் காலம் முடிவடைவதால் தேர்தல் நடைபெறுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனும் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகின்றனர்.
லோக்சபா எம்பிக்கள்
துணை ஜனாதிபதியை லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்கள் வாக்களித்து தேர்வு செய்வர். லோக்சபாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பிக்கள் மற்றும் 2 நியமன எம்.பி.க்கள் உள்ளனர்.
ராஜ்யசபா எம்பிக்கள்
லோக்சபா எம்பிக்கள், ராஜ்யசபாவில் எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் 12 நியமன எம்.பிக்களும் உள்ளனர். மொத்தம் 785 எம்.பி.க்கள் வாக்களித்துதான் துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவர்.
விறுவிறு வாக்குப் பதிவு
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டு மூலம் அனைவரும் வாக்களித்தனர். முதல் வாக்கினை பிரதமர் மோடி பதிவு செய்தார். லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் மாலை 5 மணிவரை வாக்குகளை பதிவு செய்தனர். மொத்தம் 98.21% வாக்குகள் பதிவாகின.
மாலையே முடிவுகள்
மொத்தம் உள்ள 785 வாக்குகள் 771 வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணப்பட்டு உடனே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
வெங்கையா நாயுடு வெற்றி
தற்போதைய நிலையில் நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் 550 பேர் உள்ளனர். இதனால் வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி தேர்தலில் வெல்வது உறுதி என்று கூறப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டது போல வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார். பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்கள் வெங்கையா நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.