இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலமான "எமர்ஜென்சி" பிரகடனப்படுத்தப்பட்ட 'கருப்பு நாள்' இன்றுதான்....
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலமாக வரலாற்றின் பக்கங்களில் கருப்பு நாளாக இடம்பிடித்துக் கிடக்கும் எமர்ஜென்சி எனப்படும் அவசர நிலை பிரகடனம் இதே நாளில்தான் 41 ஆண்டுகளுக்கு முன்பு 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அம்மையாரால் பிரகடனம் செய்யப்பட்டது.

எமர்ஜென்சி தொடர்பான சில முக்கிய தகவல்கள்:
- 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டது.
- 21 மாதங்கள் அதாவது 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி வரை எமர்ஜென்சி அமலில் இருந்தது.
- 1971 லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 1975ஆம் ஆண்டு ஜூன் 12-ந் தேதியன்று இந்திரா வென்றது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டு 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.
- நீதிமன்ற தீர்ப்பின்படி இந்திரா பதவி விலகக் கோரி முதுபெரும் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. இதனைத் தொடர்ந்தே எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டது.
- இந்திரா காந்தியிடம் எமர்ஜென்சியை அமல்படுத்தலாம் என ஆலோசனை கூறியது மேற்கு வங்க முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ராய் (எஸ்.எஸ்.ராய்).
- பிரதமராக இருந்த இந்திராவின் ஆலோசனைப்படி எமர்ஜென்சியை பிரகடனம் செய்தவர் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது.
- இந்திராவின் எமர்ஜென்சி வெறியாட்டங்களுக்கு அவரது இளைய மகன் சஞ்சய்காந்தி தலைமை வகித்தார்.
- சஞ்சய்காந்தி உத்தரவால் எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்ட நள்ளிரவில் தினசரி பத்திரிகைகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது
- இந்திய அரசியல் சாசனத்தின் 352-வது பிரிவின் கீழ் அனைத்து அதிகாரங்களையும் தம் வசமாக்கினார் இந்திரா காந்தி.
- இந்திராவை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜ்நாராயணன், சரண்சிங், ஆச்சார்ய கிருபாளினி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், வாஜ்பாய், அத்வானி என பல எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையிலடைக்கப்பட்டனர்.
- தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தது. இதனால் எண்ணற்ற திமுகவினர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. எமர்ஜென்சியை எதிர்த்த காரணத்தால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
- 1977-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி படுதோல்வி அடைய ஜனநாயகத்தின் இருண்ட காலமான எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications