சத்தீஸ்கரில் தலைக்கு ஒரு கோடி அறிவிக்கப்பட்டிருந்த தலைவர் உட்பட 30 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொலை!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய ஆபரேஷனில் 30 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் தலைக்கு ஒரு கோடி அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவரும் கொல்லப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வரும் சூழலில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இன்னுமே மாவோயிஸ்ட் பிரச்சினை தொடரவே செய்கிறது. மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கப் பாதுகாப்புப் படையினர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் ஆயுத போராட்டத்தைக் கைவிட்டால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தருவது ஒரு பக்கம் இருந்தாலும் அதிரடி ஆபேஷன்களும் தொடர்கிறது.

மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை
அப்படி தான் இன்று சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய ஆபரேஷனில் 30 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.. நாராயண்பூரில் தேடுதல் வேட்டையின்போது மாவோயிஸ்ட்டுகள்- பாதுகாப்புப் படைக்கு இடையே மோதல் வெடித்துள்ளது..
அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்... இதில் தலைக்கு ஒரு கோடி அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலங்களில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை அதிகரித்து வரும் சூழலில் இது முக்கிய ஆபரேஷனாக பார்க்கப்படுகிறது.
பசவராஜ்
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடனான இந்த மோதலில் நக்சல்களின் முக்கியத் தலைவரான நம்பலா கேசவ் ராவ் எனப்படும் பசவராஜ் உட்பட 30 நக்சல்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளராக பசவராஜ் இருந்தார். 1970களில் இருந்தே நக்சல் இயக்கத்தில் பசவராஜ் இருக்கிறார். அப்போது முதல் பல நாச வேலைகளிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக நாடு முழுக்க உள்ள பாதுகாப்புப் படையினர் அவரை தேடி வருகிறார்கள். அவரது தலைக்கும் ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது.
என்ன நடந்தது
இந்தச் சூழலில் தான் சத்தீஸ்கரில் நடந்த இந்த மோதலில் மாவட்ட ரிசர்வ் காவல்படைகளால் பசவராஜ் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் நாராயண்பூர் மாவட்டத்தின் வனப்பகுதியான அபுஜ்மத் என்ற பகுதியில் மிகப் பெரிய நக்சல் ஆபரேஷன் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்குப் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது.
மாவோயிஸ்ட்டுகளைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது திடீரென மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கி சூடு ஆரம்பித்துள்ளனர். இதில் தான் 30 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.
உளவுத் தகவல்
மூத்த மாவோயிஸ்ட் தலைவர்கள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த உளழு தகவலை அடிப்படையாக வைத்தே அதிகாரிகள் இந்த ஆபரேஷனை நடத்தியுள்ளனர். இதில் மொத்தம் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் படை பங்கேற்றுள்ளது. அதேநேரம் இந்த ஆபரேஷன் தொடர்பாக மாநில அரசோ அல்லது பாதுகாப்புப் படையோ இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இரு வாரங்களுக்கு முன்பு சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தின் காடுகளில், தெலுங்கானா எல்லையில் உள்ள கர்ரேகுட்டா மலைகளுக்கு அருகில் இதேபோல பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவம் நடந்து இரு வாரங்களில் மீண்டும் அதிரடி ஆபரேஷன் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications