ராகிங் கொடுமை... சென்னை மாணவர் ஹைதராபாத்தில் தூக்கு போட்டு தற்கொலை!
ஹைதராபாத்: சென்னையில் படித்த வந்த பொறியியல் மாணவர் ஹைதராபாத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ண சைதன்யா 19 வயதான அந்த மாணவர் சென்னையில் உள்ள சத்தியபாமா பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் பயிலும் மூத்த மாணவர்கள் சிலர் அவரை நீண்ட நாட்களாக ராகிங் செய்து வந்துள்ளனர்.
அவரது ஏ.டி.எம் அட்டையை பறித்து வைத்துக்கொண்டு தேவைப்படும் போது பணத்தையும் எடுத்துள்ளனர். ராகிங் ஒரு கட்டத்தை மீறியதால் சைதன்யா மனமுடைந்துள்ளார்.
விடுமுறைக்காக தனது சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது தற்கொலைக்கு காரணமான விஜயவாடாவை சேர்ந்த சேகர் மற்றும் அவரது நண்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கும்படி கூறி கடிதம் எழுதிவைத்துள்ளார் கிருஷ்ண சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது.