மாற்றானுடன் இருந்த மனைவியை பொறாமையில் வெட்டிக் கொன்ற 53 வயது நபர்
அய்சால்: மிசோரத்தில் 53 வயது நபர் ஒருவர் தனது மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் உள்ள லுங்லெங் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்ராம்லியானா(53). அவருக்கும் அவரது மனைவி லால்சாவ்ம்லியானிக்கும்(46) இடையே பிரச்சனையாக இருந்துள்ளது. இதையடுத்து லால்ராம்லியானாவின் கொடுமையை தாங்க முடியாமல் அவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றார்.
இந்நிலையில் லால்ராம்லியானா ஞாயிற்றுக்கிழமை தனது மனைவி வசித்து வரும் சிசாவ்ங் கிராமத்திற்கு சென்றுள்ளார். தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அவர் தனது நண்பர்கள் மூலம் மனைவிக்கு தூது விட்டும் அவர் கேட்கவில்லை.
நேற்று இரவு லால்ராம்லியானா தனது மனைவி விவாகரத்தான நபரின் வீட்டில் இருப்பதை பார்த்தார். இதனால் பொறாமையில் அவர் அந்த வீட்டிற்குள் நுழைந்து தனது மனைவியை அரிவாளால் தலை, தோள், முழங்கையில் சரமாரியாக வெட்டினார். இதில் பாடுகாயம் அடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவருடன் இருந்த ஆண் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்நிலையில் கிராமத்தினர் ஓடி வந்து அந்த வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து லால்சாவ்ம்லியானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் லால்ராம்லியானாவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.