பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தாயாருக்கு அடி உதை.. வழக்கை வாபஸ் பெறாததால்
எடாவா: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தாயார் வழக்கை வாபஸ் பெற மறுத்ததால் அடித்து உதைத்து தாக்கப்பட்டுள்ளார்.
உ.பி. மாநிலம் எடாவா நகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. எடாவா நகரானது உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் சொந்த மாவட்டத் தலைநகராகும். இங்குதான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
இந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸில் தாயார கொடுத்த வழக்கின்பேரில் போலீஸார் சிலரைக் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் தந்தையான பசந்த் யாத் உள்ளிட்ட ஐந்து பேர் பாதிக்கப்பட்ட பெண்ணை அணுகி புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு தாயார் மறுக்கவே அவரை சரமாரியாக அடித்து உதைத்துக் காயப்படுத்தி விட்டனர்.
தற்போது படுகாயமடைந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பேச்சு போய் விட்டதாக கூறப்படுகிறது. அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் போலீஸார் கைது செய்யாமல் உள்ளனர்.