மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனே “ஆட்டோகிராப்” கேட்டார் தெரியுமா? அமித்ஷா புகழ்ச்சி
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனே ஆட்டோகிராப் கேட்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்திநகர் மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சென்று இருக்கிறார். குறிப்பாக மோடி சமூகத்தின் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, "ஜி7 கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்துகொண்ட விதம், கலாச்சாரம் மற்றும் தொலைதூரம் போன்ற தடைகளை தாண்டி அவர் எந்த அளவிற்கு பிரபலமாகி இருக்கிறார் என்பதை காட்டுகிறது.
'சமஸ்த் பாரதிய மோடி சமாஜ்' எனப்படும் மோடி சமூகத்தினர் கலந்துகொண்ட பிரம்மாண்ட ஒன்றுகூடலில் பேசிய அமித்ஷா, "ரத்தோர், டெலி சாஹு, மோடி சமாஜ் ஆகியோர் இந்த நாட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பை செய்து இருக்கின்றனர். அவர்கள் நமக்கு பிரதமரையே கொடுத்து இருக்கிறார்கள். அவர் உலகளவில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தர உழைத்து வருகிறார்.
இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூட இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்டோகிராப் வேண்டும் என்று கேட்கிறார். ஒரு இந்தியனாக இது எனக்கு மிகப்பெரிய பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இவை அனைத்தும் ஒவ்வொரு இந்தியனையும் மகிழ வைக்கும் விசயங்களாகும்.
காங்கிரஸ் கட்சி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரை துன்புறுத்தவும், அவமானப்படுத்தவும் செய்கிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரை கண்ணியப்படுத்தும் சூழல் தொடங்கியது. ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திர பாய்க்கு, நாட்டில் வாழும் ஏழைகளின் வலி நன்கு தெரியும்.
அனைத்து வகையான வசதிகளும் நாட்டில் உள்ள ஏழைகளுக்கும் சென்று சேர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புவார். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு முந்தைய 61 ஆண்டுகால இந்திய அரசுகளின் ஆட்சியையும், கடந்த 9 ஆண்டுகால நரேந்திர மோடியின் ஆட்சியையும் ஒப்பிடுகையில், 9 ஆண்டுகால மோடி ஆட்சியே கனமானதாக இருக்கும்.

ஜப்பான் சென்று இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஜி7 மற்றும் குவாட் அமைப்புகளின் மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகள், வர்த்த தொடர்புகள், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உள்ளிட்ட உலக தலைவர்களும் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications