கைவிட்டது மலேசியா.. ஏர்செல் -மேக்ஸிஸ் வழக்கிலிருந்து தப்புகிறார் தயாநிதி மாறன்?
டெல்லி: ஏர்செல் - மேக்ஸிஸ் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிரான இந்த வழக்கில், தயாநிதிக்கு எதிராக குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்யும் திட்டத்தை சிபிஐ கைவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
போதுமான ஆதாரங்கள் கிடைக்காததாலும், மலேசியாவிலிருந்து இந்த வழக்கு தொடர்பாக எந்தவிதமான பதிலும் வராததாலும் குற்றப்பத்திரிக்கையைக் கைவிட சிபிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போதுள்ள ஆதாரங்களை வைத்து தயாநிதி மீது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்வது சரியாக இருக்காது என்றும் சிபிஐ கருதுகிறதாம்.

இரு வேறு கருத்துக்கள்
அதேசமயம், சிபிஐயின் விசாரணைக் குழு தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டோர் மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்ய ஆர்வமாக உள்ளனராம். ஆனால் சிபிஐ உயர் அதிகாரிகளோ இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனராம்.

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா எதிர்ப்பு
ஆனால் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூட, தற்போதுள்ள ஆதாரங்கள் கோர்ட்டில் நிற்காது என்று கருதுகிறாராம்.

கருத்து தெரிவிக்க அட்டர்னி ஜெனரல் மறுப்பு
இந்த விவகாரம் தொடர்பாக அட்டர்னி ஜெனரல் கூலம் வாஹன்வதியிடம் சிபிஐ சட்ட ஆலோசனை கேட்டிருந்தது. ஆனால் அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டாராம். காரணம், விசாரணை அதிகாரிக்கும், சிபிஐ இயக்குநருக்கும் இடைய ஒருமித்த கருத்து இல்லாததால்.

கடந்த வருடம் வரை நம்பிக்கையுடன்
இந்த வழக்கில் கடந்த வருடம் வரை மாறனுக்கும், மற்றவர்களுக்கும் எதிரான ஆதாரங்கள் இருப்பதாகத்தான் சிபிஐ கருதி வந்தது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் கூட, விரைவில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்வோம் என்றும் அது உறுதியளித்திருந்தது.

மலேசியாவில் என்ன நடந்ததோ...??
ஆனால் சமீபத்தில் மலேசியாவின், மேக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க்ஸ் நிறுவனங்கள் இந்த விசாரணையை ஆட்சேபித்து சிபிஐக்குக் கடிதம் எழுதியதால் குழப்பம் ஏற்பட்டது.

தகவல் தர மலேசியா மறுப்பு
மேலும் மலேசிய அரசின் அட்டர்னி ஜெனரல் தான் ஸ்ரீ அப்துல் கானி படாய்ல், சமீபத்தில் சிபிஐ இயக்குநரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது மலேசிய நாட்டுச் சட்டப்படி தகவல்களைத் தருவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக சுட்டிக் காட்டினார். இதனால் சிபிஐ, சோர்ந்து போனது.

குற்றம் நடந்தது உண்மையே..
இதுகுறித்து சிபிஐ தரப்பில் சிலர் கூறுகையில் தற்போது இந்தியாவில் வைத்து திரட்டப்பட்ட ஆதாரங்கள், ஆவணங்கள், புலனாய்வு விசாரணை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், மலேசியாவிலிருந்து நமக்குஉரிய பதில் வர வேண்டும். அது வந்தால்தான் வழக்கு நிற்கும். அதுதான் மிகவும் முக்கியம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

என்ன பிரச்சினை...?
சிவசங்கரன் தலைமையிலான ஏர்செல் நிறுவனம் 2004 முதல் 2006 வரை தனது செல்போன் சேவைகளுக்கு உரிமம் கோரி வந்தது. ஆனால் அதை தயாநிதி மாறன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தடுத்தார். மேலும், ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை அனந்தகிருஷ்ணன் தலைமையிலான மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்குமாறு சிவசங்கரனை அவர் நெருக்கினார் என்பது குற்றச்சாட்டாகும்.

அதன் பிறகு தாராள சலுகை
பங்குகள் விற்கப்பட்ட பின்னர் ஏர்செல் நிறுவனம் கேட்ட உரிமங்கள் உடனுக்குடன் கொடுக்கப்பட்டது. 2006ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய தொலைத் தொடர்புத்துறை ஏர்செல் நிறுவனத்தின் 13 உரிமக் கோரிக்கைக் கடிதங்கள் அனைத்தும் 2006 டிசம்பரில் ஒப்புதல் தரப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டன. இதற்கு தயாநிதி மாறன்தான் காரணம் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு.

சன் குழுமத்திற்கு பெரும் பணத்தைக் கொடுத்த மேக்ஸிஸ்
மேலும் இப்படி உரிமம் தாராளமாக வாரி வழங்கப்பட்ட 3 மாதத்திற்குள் தயாநிதி மாறன் குடும்பத்திற்குச் சொந்தமான சன் டிவி குழுமத்தில் மேக்ஸிஸ் நிறுவனம் பெரும் முதலீட்டைச் செய்தது. இதைத்தான் முறைகேடு நடந்திருப்பதற்கான முக்கிய அம்சமாக சிபிஐ கூறுகிறது.

சன் டைரக்டில் ரூ. 599.01 கோடி
சன் குழுமத்தின் சன் டைரக்ட் நிறுவனத்தில் 2007 டிசம்பர் முதல் 2009 டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மேக்ஸிஸ் நிறுவனம் ரூ. 599.01 கோடியை முதலீடு செய்துள்ளது. மேலும், மாறன் குழுமத்திற்குச் சொந்தமான எப்எம் ரேடியோ நிறுவனத்தில் ரூ. 111 கோடியை மேக்ஸிஸ் முதலீடு செய்தது என்பதும் நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications