இந்த கொடுமையை என்ன சொல்ல.. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் எம்எல்ஏ, ராணுவ அதிகாரி பெயர்களும் மிஸ்சிங்!
கவுகாத்தி: அசாமின் இறுதி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) இருந்து நீக்கப்பட்ட 19 லட்சம் மக்களில் ஒருவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி முகமது சனாவுல்லா என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், இப்படி பல குளறுபடிகள் அங்கே அரங்கேறியுள்ளன.
இந்த தகவல் குறித்து அறிந்த சனாவுல்லா அளித்த பேட்டியில், "நீதித்துறையில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்." என்றார். வரைவுப்பட்டியலிலும் இவர் பெயர் இல்லை. எனவே ஏற்கனவே சனாவுல்லா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சனவுல்லா மட்டுமல்ல, தெற்கு அபயாபுரியைச் சேர்ந்த அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ அனந்த குமார் மாலோ மற்றும் அவரது மகனின் பெயரும் பட்டியலில் இல்லை.

எம்எல்ஏ புலம்பல்
"எனது மகன் பெயரும் பட்டியலில் இல்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மற்றவர்களைப் போலவே, எங்கள் குடியுரிமையை நிலைநாட்ட நாங்களும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்," என்றார் அனந்தகுமார். தல்கானைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ இலியாஸ் அலி பெயர் என்.ஆர்.சி.யில் உள்ளது. ஆனால் அவரது மகள் பெயர் இல்லை.
|
கார்கில் ஹீரோ
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி முகமது சனாவுல்லா கார்கில் போரின் ஹீரோக்களில் ஒருவர். இறுதி பெயர் பட்டியலில் சனவுல்லாவின் மனைவியின் பெயர் இடம்பெற்றுள்ளதாம். ஆனால் இவரது பெயரும் மகள்கள் மற்றும் மகன் பெயர்கள் பட்டியலில் இடம் பெறத் தவறிவிட்டது.

வெளிநாட்டினர்
இதற்கிடையில், அனைத்து அசாம் மாணவர் சங்கம் உட்பட பல அமைப்புகள் இந்த பட்டியல் பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளன. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வெளிநாட்டினராகவும், சட்ட விரோதமாக குடியேறியவர்களாகவும் கருதப்படுவார்கள்.

கேள்விகள்
வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள், வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தில் முறையீடு செய்து வழக்காட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டசபை உறுப்பினர், முன்னாள் ராணுவ வீரர்கள் பெயர்கள் கூட இடம் பெறாத இந்த பட்டியல் எப்படி சரியானதாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications