அர்விந்த் கேஜ்ரிவாலை சுட்டுக்கொல்வேன்: ஆட்டோ டிரைவர் ஆவேசம்
டெல்லி: அர்விந்த் கெஜ்ரிவாலை சுட்டுக்கொல்வேன் என்று டெல்லியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு சில நாட்களுக்கு முன் ஒரு மர்ம டெலிபோன் வந்தது. கட்சி தலைவர் டி.டி.சர்மா போனை எடுத்தார்.
அதில் பேசியவர் தன்னை ராம் நாராயணன் பகத் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளராக இருந்ததாக தெரிவித்தார்.

திடீர் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை ஏமாற்றி விட்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து தவறி விட்டார். அவரது செயல்பாடுகள் சரியில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் கெஜ்ரிவால் ஜந்தர் மந்தர் வந்தால் சுட்டுக் கொல்வேன் என்றும் ஆவேசமாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.
உடனே இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. பாராளுமன்ற தெரு போலீசார் விசாரணை நடத்தி மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்தனர். இவர் முன்பு ஆட்டோ டிரைவராக பணியாற்றியவர் என தெரியவந்தது. ஆம் ஆத்மியிலும் உறுப்பினராக இருந்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஆட்டோ டிரைவர்கள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். அதில் முக்கியமானது டெல்லியில் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்க கூடாது என்பதாகும். அது நிறைவேற்றப்படாததால் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. எனவேதான் இந்த மிரட்டல் வந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications