ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாப்டே சந்திப்பு?
நாக்பூர்: பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்தை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சந்தித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தங்களுக்கு தெரியவில்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் எஸ்.ஏ.பாப்டே. 47-வது தலைமை நீதிபதியாக 2019-ல் பணியை தொடங்கி கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி ஓய்வு பெற்றார் பாப்டே.

எம்.பி.யாக ரஞ்சன் கோகாய்
அவரைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா தற்போது பதவி வகித்து வருகிறார். எஸ்.ஏ.பாப்டேவுக்கு முன்னதாக தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகாய். தற்போது ராஜ்யசபாவின் நியமன எம்.பி.யாக உள்ளார்.

சர்ச்சைகளில் பாப்டே
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் பாப்டே. தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் நாக்பூர் பாஜக தலைவரின் மகனின் உயர்ரக இருசக்கர வாகனத்தில் பாப்டே பயணம் செய்தது பெரும் சர்ச்சையானது. அதேபோல் மத்திய அரசின் அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்கிற திட்டத்தை அண்ணல் அம்பேத்கர் உருவாக்கி இருந்ததாக பாப்டே பேசியதும் சர்ச்சையானது.

மோகன் பகவத்துடன் சந்திப்பு?
தற்போது ஓய்வு பெற்ற நிலையில் நாக்பூரிலும் டெல்லியிலும் இருந்து வருகிறார் பாப்டே. இந்நிலையில் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்தை நேற்று பாப்டே சந்தித்தார் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணிவரையிலான நேரத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் தலைமை நீதிபதி பாப்டே, மோகன் பகவத்தை சந்தித்து பேசியது இதுதான் முதல் முறையாம்.

ஹெக்டேவர் இல்லத்தில்..
இந்த சந்திப்புக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெக்டேவரின் மூதாதையர் இல்லத்துக்கும் பாப்டே சென்று பார்வையிட்டாராம் பாப்டே. இருந்தபோதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர்கள் இப்படியான ஒரு சந்திப்பு நடந்தது தங்களுக்கு தெரியாது என கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications