கடும் எதிர்ப்புகளை மீறி கேரளா ஆளுநராக சதாசிவம் நியமனம்! நாளை பதவியேற்பு!!
டெல்லி: கேரளா மாநில ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று பிறப்பித்தார்.
கேரளா ஆளுநர் பதவியில் இருந்த ஷீலா தீட்சித் அண்மையில் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அப்பதவிக்கு நீதிபதி பி.சதாசிவம் பெயரை ஜனாதிபதியிடம் மத்திய அரசு பரிந்துரைத்தது.

விமர்சனங்கள்
ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்பவர் ஜனாதிபதிக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் தகுதி உடையவர். அவரை ஜனாதிபதிக்கு கீழான ஆளுநர் பொறுப்பில் நியமிப்பது மரபுகளை மீறுவது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

கேரளா எதிர்ப்பு
இதேபோல் கேரளா அரசியல் கட்சிகளும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை மாநில ஆளுநராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

ஜனாதிபதி அறிவிப்பு
இந்த விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் மீறி கேரளாவின் ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகை நேற்று இரவு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கேரளாவின் ஆளுநராக இருந்த ஷீலா தீட்சித் அளித்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார். அந்தப் பதவியில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவத்தை நியமிக்கவும் உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பதவியேற்பு
கேரளா ஆளுநராக நீதிபதி சதாசிவம் நாளை பதவியேற்க உள்ளார். அவருக்கு கேரளா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

9 மாதங்கள் தலைமை நீதிபதி
கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.

முதல் முறையாக..
நாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஒருவர் ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications