வானத்திலிருந்து பெய்த திடீர் பண மழை.. அத்தனையும் 500 ரூபாய் நோட்டுக்கள்! கிராம மக்களுக்கு ஜாக்பாட்
பெங்களூரிலும் சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் இதேபோல 10 ரூபாய் நோட்டுக்களை காற்றில் வீசியெறிந்தார்.
காந்திநகர்: குஜராத்தில் முன்னாள் ஊர் தலைவர் ஒருவர் தனது மருமகனை வரவேற்க 500 ரூபாய் நோட்டுக்களை மாடியிலிருந்து வீசியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களை சேகரிக்க மக்கள் அதிக அளவு குவிந்ததால் அப்பகுதி கலவர பூமி போல காட்சியளித்தது.
இந்தியர்களின் ஒரு நாளைய சராசரி வருமானம் 293.5 ரூபாய்தான். இந்நிலையில், திடீரென்று வானத்திலிருந்து 500 ரூபாய் நோட்டு மழை பெய்தால் எப்படி இருக்கும்? ஆம் மக்களே குஜராத்தில்தான் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. கேக்ரி தாலுகாவில் உள்ள அகோல் கிராமத்தில் ஒரு திருமண விழாவில் இந்த பணமழை பொழிந்திருக்கிறது. இதனை எடுக்க மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் சேர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் கரீம் யாதவின் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது மருமகனை ஊருக்குள் வரவேற்கும் விதமாக அவர் இவ்வாறு பணத்தை காற்றில் வீசி எறிந்துள்ளார். நாட்டின் வட மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதால் அங்குள்ள மக்களுக்கான வருமானம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆண்டில் 100 நாட்கள் இவர்களுக்கு வேலை இருந்தால் அதுவே அதிகம். எனவே வருமான பற்றாக்குறையால் பெரும்பாலானோர் வறுமையில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பணமழையில் தங்களுக்கு ஒரு 500 ரூபாய் நோட்டாவது கிடைக்காதா என பெண்களும் முதியவர்களும் கூட்டம் கூட்டமாக ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலம் கிராமத்தில் நுழைந்தவுடன் ஒரு உயரமான வீட்டின் மாடியின் மீது ஏறிய கரீம் யாதவ் தனது மருமகன் பெயரை குறிப்பிட்டு வாழ்த்தி பணத்தை காற்றில் பறக்கவிட்டிருக்கிறார். மக்கள் இந்த பணத்தை பிடிக்க முயன்றதில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது இதில் முதியோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பணத்தை காற்றில் பறக்கவிடும் சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதுபோல ஏற்கெனவே பலமுறை நடந்திருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சில நாட்களுக்கு முன்னர் இதேபோல இளைஞர் ஒருவர், மேம்பாலத்தில் நின்றுகொண்டு பணத்தை வீசியெறிந்துள்ளார். பெங்களூரின் கே.ஆர்.மார்க்கெட்டை ஒட்டியுள்ள மேம்பாலத்திற்கு பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் பாலத்தில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை நிறுத்தியுள்ளார். பின்னர் தான் வைத்திருந்த கைப்பையிலிருந்து 10 ரூபாய் நோட்டுக்களை எடுத்து வீசியெறிந்துள்ளார். ஆள் கோட் சூட் போட்டவாறு, கழுத்தில் பெரிய சைஸ் கடிகாரம் அணிந்திருந்ததால் மக்கள் அவரிடம் போக பயந்துள்ளனர்.
இந்த நபர் ஒரு கட்டத்தில் பாலத்திற்கு கீழேயும் ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்துள்ளார். வானத்திலிருந்து பணமழை பொழிவதை பார்த்த மக்கள் ஓடிச்சென்று அதனை சேகரிக்க தொடங்கினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications