செல்போனில்தான் எல்லாம் இருக்கு.. கொல்கத்தா மருத்துவரின் பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு
கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தங்களது மகளின் செல்போனை ஆய்வு செய்தால் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்று மருத்துவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் விட்டுச் சென்ற புளூடூத் மூலம் அடையாளம் காணப்பட்டு, போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
உயிரிழந்த பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில் கொடூர காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிபயங்கர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கழுத்து நெறிக்கப்பட்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தை கண்டிப்பதாகக் கூறி வன்முறையாளர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, கொல்கத்தா மருத்துவமனைக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துணை ராணுவப் படையான சிஐஎஸ்எப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே சஞ்சய் ராயின் மனோதத்துவ விவரக் குறிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் மிகவும் வக்கிரமானவராகவும், ஆபாசத்துக்கு அடிமையாகியும் உள்ளார். அவருக்கு விலங்கு போன்ற உள்ளுணர்வு உள்ளது தெரியவந்துள்ளது. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மருத்துவரின் கொடூர கொலை குறித்து அவருக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. கொஞ்சம்கூட அச்சம்பவத்துக்கு அவர் மனம் வருந்தவில்லை. அங்கு நடந்த ஒவ்வொரு நிமிட சம்பவம் குறித்தும் தெளிவாக விவரித்துள்ளார் என்று சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், மருத்துவரின் பெற்றோர் தங்களது மகளின் செல்போனை ஆய்வு செய்தால் முக்கிய ஆதாரம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அவரது பெற்றோர கூறுகையில், மகளின் செல்போன் பேட்டன் எங்களுக்குத் தெரியவில்லை. தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு செல்போனை ஆய்வு செய்தால் முக்கிய ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மகளின் மரணத்துக்கு காரணமான உண்மையான குற்றவாளியை காப்பாற்றுவதற்காக ஆதாரங்கள் மறைக்கப்படுகின்றன. உண்மையான குற்றவாளி சுதந்திரமாக வெளியில் இருக்கிறார். மகளின் செல்போனை ஆய்வு செய்தால் உண்மையான குற்றவாளி யார் என்பதற்கான ஆதாரம் தெரியவரும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications