2012ம் ஆண்டு ராணுவப் புரட்சிக்கு முயன்றார் மாஜி தளபதி வி.கே.சிங்: மணிஷ் திவாரி
டெல்லி: புரட்சியின் மூலம் கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவின் ஆட்சியை கைப்பற்ற முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் முயற்சித்தது உண்மை தான் என முன்னாள் மத்திய அமைச்சர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இப்படிப் பேசியதற்காக காங்கிரஸ் மேலிடம் திவாரியைக் கண்டித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி நள்ளிரவு ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில முகாம்களில் இருந்து டெல்லியை நோக்கி ராணுவத்தின் 3 பெரிய படைப்பிரிவுகள் சென்றதாகவும், ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கவிழ்க்க அவர்கள் முயற்சித்ததாகவும் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் பிரபல ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியானது.

இந்தத் தகவலால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்தத் தகவலை மறுத்தது.
அதனைத் தொடர்ந்து வயது விவகாரம் தொடர்பாக ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் மீது அரசு குற்றம் சாட்டியது. பதிலுக்கு வி.கே.சிங்கும் ராணுவத்துக்கு வாகனங்கள் வாங்க தன்னிடம் ஒருவர் 14 கோடிக்கு லஞ்ச பேரம் பேசியதாக புகார் தெரிவித்தார்.
இந்த பிரச்சனை அடங்கும்முன், ராணுவத்திடம் போதுமான ஆயுதங்கள் இல்லை என்றும் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வி.கே.சிங் எழுதிய கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக வி.கே.சிங் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘டெல்லியை நோக்கி ராணுவ படை பிரிவுகள் சென்றதாக வெளியான செய்திகள் முட்டாள்தனமானது. அரசு மீதும் ராணுவத்தின் மீதும் தேவையில்லாமல் சேறுவாரி இறைக்கும் முயற்சி இது.
ராணுவ தளபதிக்கு எதிராக இதுபோன்ற கதைகளை கிளப்பி விடுபவர்கள் யாராக இருந்தாலும் வருந்தத்தக்கது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செய்திகள் மக்களிடம் தேவையற்ற பீதியை ஏற்படுத்தும். இதை அனுமதிக்கக் கூடாது' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து நான்காண்டுகள் கடந்த நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பதவி வகித்த மணிஷ் திவாரி கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் இந்த ராணுவப் புரட்சி குறித்து விருந்தினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர், "எனது அறிவுக்கு எட்டியவரை அந்த செய்தி தொடர்பான சம்பவம் உண்மைதான். அப்போது நான் பாதுகாப்புத்துறையின் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தேன். துரதிர்ஷ்டவசமான தகவலாக இருந்தபோதிலும், அச்சம்பவம் தொடர்பாக வெளியான செய்தி உணமையானதுதான்' எனத் தெரிவித்தார்.
மணிஷ் திவாரியின் இந்தப் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் வி.கே.சிங் பாஜகவில் சேர்ந்தார். மேலும் அவர் தற்போது மத்திய அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications