“கண்” வந்திருச்சு! குஜராத்தை குலைக்கும் பைபர்ஜாய் புயல்.. கதிகலங்கும் கட்ச் -சவுராஷ்டிராவிலும் மோசம்
காந்திநகர்: அரபிக்கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயலின் கண் பகுதி கரையை தொட்டு இருக்கும் நிலையில், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக அம்மாநிலத்தில் இருந்து அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.
14 ஆம் தேதி வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர பைபர்ஜாய் புயல், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வியாழக்கிழமை காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) மேற்கு - தென்மேற்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து மேற்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிகும் போர்பந்தரில் (குஜராத்) இருந்து மேற்கு-வடமேற்கே சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது.

இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா - கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் வியாழன் மாலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்றது. அது மாண்டிவி (குஜராத்) - மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்தது.
புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 115 முதல்125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில், இரவு புயலின் வெளிப்புற பகுதி 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை தொட்டு கடக்கத் தொடங்கியது.
அப்போதே குஜராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிராவின் கடலோர பகுதிகளில் கடுமையான காற்றுடன் மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் வேறோடு முறிந்து விழுந்துள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் புயலின் மையப்பகுதியான கண் பகுதி தற்போது குஜராத்தின் நாலியா, மண்ட்வி, துவாரகா, சலாயா, ஜாம்நகர் உள்ளிட்ட கடலோர பகுதிகளை தொட்டு இருக்கிறது. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதிக வேகத்தில் புயல் கரையை கடந்து வருவதால் பாதிப்பு மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசு முடுக்கிவிட்டு உள்ளது. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அமைச்சர்கள், அதிகாரிகளை கொண்ட உயர்மட்ட குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவர் ஆலோசித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications