போலி என்கவுன்ட்டர் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத அமித் ஷாவுக்கு சி.பி.ஐ. கோர்ட் எச்சரிக்கை!!
மும்பை: போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் நேரில் ஆஜராகததால் பாரதிய ஜனதா தலைவர் அமிஷ்தாவுக்கு சிபிஐ நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு குஜராத்தில் சொராபுதின் ஷேக் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு சாட்சியாக இருந்த துளசிராம் பிரஜாபதியும் பின்னர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களிலும் குஜராத்தின் அப்போதைய அமைச்சரும் தற்போதைய பாரதிய ஜனதாவின் தலைவருமான அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, போலி என்கவுன்ட்டர் வழக்குகள் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில், அமித் ஷா, போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட 38 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர். மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் அமித்ஷா இதுவரை ஆஜராகவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி உத்பத், அதிரடியாக புனே நகருக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து புதிய நீதிபதி முன்னிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும் அமித்ஷா நீதிமன்றத்தில் ஆஜராகமலேயே இருந்து வந்தார்.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, தாம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கட்சியின் முக்கிய தலைவர்களை அடிக்கடி சந்தித்து பேச வேண்டி இருப்பதால் நேரில் ஆஜராக தனக்கு விலக்கு அளிக்குமாறு அமித்ஷா மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை ஏற்று அப்போது நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது. ஆனால் இன்றும் வழக்கம்போல் அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனால் கோபமடைந்த நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராக தவறிய அமித் ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். அவரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications