7 வருட தண்டனை தந்திருப்பேன்.. ஆனால் வயதுக்காக 4 வருடத்துடன் நிறுத்துகிறேன்.. நீதிபதி குன்ஹா
பெங்களூர்: அதிகாரத்தில் இருந்து கொண்டு அதை துஷ்பிரயோகம் செய்து தவறுகள் நடக்கக் காரணமாக இருந்ததற்காக உங்களுக்கு அதிகபட்ச தண்டனையான 7 வருடம் என்றுதான் தீர்ப்பளிக்க நினைத்தேன். ஆனால் உங்களது வயது காரணமாகவும், வழக்கு 18 வருட தாமதம் என்பதாலும் 4 வருட தண்டனை அளிக்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பளித்தபோது மாஜிஸ்திரேட் மைக்கேல் டி குன்ஹா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிரடியான தீர்ப்பை அளித்தவர் குன்ஹா. தனது தீர்ப்புக்கான காரணத்தை அதில் அவர் விளக்கியுள்ளார்.
மேலும் கடுமையான தண்டனை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம்
கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரையில், ஜெயலலிதாவின் வருமானம் ரூ.9 கோடியே 91 லட்சம் என்றும், செலவுத்தொகை ரூ.8 கோடியே 49 லட்சம் என்றும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

திருப்திகரமான கணக்கு இல்லை
இந்த 5 வருடங்களில், ஜெயலலிதா தனது பெயரிலும், மற்ற 3 குற்றவாளிகள் பெயரிலும், தங்கள் நிறுவன பெயர்களிலும் ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு அசையா சொத்துகள் வாங்கி குவித்ததாகவும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இந்த வருமானத்துக்கு ஜெயலலிதாவால் திருப்திகரமாக கணக்கு காட்ட முடியவில்லை.

வருமானத்திற்குப் பொருந்தாத வகையில்
ஜெயலலிதாவின் வருமானத்துக்கு பொருந்தாத வகையில், குற்றவாளிகள் 4 பேரும் சொத்துகளை குவிக்கும் நோக்கத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டு, ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு சொத்து சேர்த்திருப்பதையும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

ஜெ.வுக்கு உள்நோக்கத்துடன் உதவிய சசி
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவிப்பதற்கு ஜெயலலிதாவுக்கு உள்நோக்கத்துடன் உதவி செய்ததன் மூலம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றம் புரிய தூண்டுகோலாக இருந்து இருப்பதையும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

4 வருட சிறை
எனவே, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

சாதாரண சிறை
குற்றச்சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, ஜெயலலிதாவுக்கு 6 மாத கால சாதாரண சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை அவர் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

சசி - இளவரசி - சுதாகரன்
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றச்சதியில் ஈடுபட்டதற்காக, 3 பேருக்கும் தலா 6 மாதம் சாதாரண சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றவாளிகள் ஏற்கனவே அனுபவித்த சிறைவாச காலம், தண்டனையில் கழித்துக்கொள்ளப்படும்.

சொத்துக்களைப் பறிக்கலாம்
குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் உள்ள வைப்பு நிதி மற்றும் ரொக்க கையிருப்பை அபராத தொகைக்காக பிடித்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

தேவைப்பட்டால் நகைகளை ஏலம் விடலாம்
அதன்பிறகும் அபராத தொகையை ஈடுகட்ட முடியாவிட்டால், குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டு, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளை ரிசர்வ் வங்கிக்கோ, பாரத ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமாகவோ விற்க வேண்டும். மீதி நகைகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும்.

கிராமத்தையே வாங்கலாம்
ஜெயலலிதா சம்பந்தப்பட்ட 6 நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துகளை மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும். கோடநாட்டில் உள்ள 900 ஏக்கர் நிலம், ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இதர விவசாய நிலங்கள், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வாங்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு அந்த நிலம் அமைந்துள்ள கிராமம் முழுவதையுமே ரூ.53½ கோடிக்கு வாங்கி விடலாம்.

கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை
இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பை நாமே கற்பனை செய்து கொள்ளலாம். வசூலிக்கப்படும் அபராத தொகையில், விசாரணை செலவுக்காக கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும்.

கடும் தண்டனை அவசியம்
குவிக்கப்பட்ட சொத்துகளின் அளவை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த கடுமையான தண்டனை தேவைப்படுகிறது.

அதிகாரம் இருந்தால்...
அதிகாரமும், சொத்து குவிப்பும் சேர்ந்த கலவைதான், இந்த வழக்கின் அடிப்படை. குறுகிய காலத்தில் ஜெயலலிதாவும், இதர குற்றவாளிகளும் சொத்துகளை குவித்து இருப்பது, சட்டவிரோத சொத்துகளை குவிப்பதற்கு ஆட்சி அதிகாரம் எப்படி பயன்படும் என்பதற்கு தெளிவான உதாரணம்.

விட்டால் ஆபத்து
இது, ஜனநாயக அமைப்புக்கு உண்மையான ஆபத்தாகும். இவர்கள் செய்த குற்றங்கள், அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டு) பாதிக்கு மேல் வழங்கத்தக்கவை. கடுமையான தண்டனை மூலம் ஊழலை ஒழிக்க பாராளுமன்றம் சட்டம் இயற்றி உள்ளது. அதன் நோக்கத்தை நிறைவேற்றுவது கோர்ட்டின் கடமை. உயர் பதவியில் இருப்போர் செய்யும் ஊழல்கள், கீழ்நிலைகளில் இருப்போரையும் ஊழல் செய்ய தூண்டி விடுவதுடன், அவர்கள் மீது உயர் பதவியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தி விடும்.

வயதுக்காக 4 ஆண்டு
அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டிய இந்த வழக்கில்,ஜெயலலிதாவின் வயது மற்றும் வழக்கின் 18 வருட கால தாமதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 4 ஆண்டுகளாக தருகிறேன் என்று குன்ஹா கூறியுள்ளார்.

நமது எம்.ஜி.ஆர் மூலம் கிடைத்த "ரூ. 14 கோடி"
குன்ஹா தனது தீர்ப்பில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை சப்ஸ்கிரைப்ஷன் மூலம் ரூ 14 கோடி கிடைத்ததாக கூறி அதை வருமான வரிக் கணக்கிலும் காட்டியதாக ஜெயா பப்ளிகேஷன் தரப்பு நாடகமாடியதையும் அவர் விளாசியுள்ளார்.

சொத்துக் குவிப்பில் 14 கோடியைக் குறைக்க
இதுகுறித்துக் குன்ஹா கூறுகையில், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு வருடாந்திர சப்ஸ்கிரைப்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் ரூ. 14 கோடி வருவாய் கிடைத்ததாகவும், ஜெயா பப்ளிகேஷன் மூலம் இதைச் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் கூறியுள்ளனர். ஆனால் இது போலியான திட்டம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு திட்டமே இல்லை.

டுபாக்கூர் திட்டம்
இந்த போலியான திட்டத்தின் மூலம் சொத்துக் குவிப்பிலிருந்து ரூ. 14 கோடியைக் கணக்கில் கொண்டு வர முயற்சித்துள்ளனர் குற்றவாளிகள்.

1998 வரை ஏன் சொல்லவில்லை
இந்தத் திட்டம் இருந்ததாக 1998ம் ஆண்டு வரை குற்றவாளிகள் தரப்பில் சொல்லப்படவே இல்லை. இப்படி ஒரு திட்டம் இருப்பதாகவே அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை. திடீரென இத்திட்டம் வந்தது எப்படி.

1990 முதல் இருந்ததாக கூறுகிறீர்களே
ஆனால் ஜெயா பப்ளிகேஷனில் 1990ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்களாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டோரின் வக்கீல் கூறுகிறார், அந்த ஆண்டு முதல் இந்தத் திட்டமும் இருப்பதாக கூறுகிறார். ஆனால்இந்தத் திட்டம் குறித்து 98ம் ஆண்டு வரை வாயே திறக்காதது ஏன் என்றும் காட்டமாக கேட்டுள்ளார் குன்ஹா.












Click it and Unblock the Notifications