போலி முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி பெங்களூருவில் மரணம்
போலி முத்திரைத்தாள்கள் அச்சடித்து பல கோடி ரூபாய் மோசடி செய்த தெல்கி பெங்களூருவில் உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை: பல கோடி மதிப்புள்ள முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அப்துல் கரீம் தெல்கி, உடல் நலக்குறைவால் பெங்களூருவில் இன்று மரணமடைந்தார்.
போலி முத்திரை தாள்களை தயாரித்து பல்லாயிரக்கணக்கான கோடி மோசடி செய்த வழக்கில், அப்துல் கரீம் தெல்கி (56) கடந்த 2001ம் ஆண்டு அஜ்மீர் நகரில் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தெல்கிக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.202 கோடி அபராதமும் விதித்தது.

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் தெல்கி. அவருக்கு 20 வருடங்களுக்கும் மேலாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்கள் இருந்தன.
மேலும் தெல்கிக்கு, உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் இருந்ததும் தெரியவந்தது.
பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இவரும், சசிகலா போன்ற விஐபிகளும், பணத்தை கொடுத்து சிறைக்குள் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள் என்று சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா சமீபத்தில் தனது புகார் கடிதத்தில் தெரிவித்து பரபரப்பை கிளப்பியிருந்தார். இதனால் மீண்டும் இவரது பெயர் லைம் லைட்டுக்கு வந்தது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர், விக்டோரியா அரசு மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை, தெல்கி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியோடுதான் தெல்கி சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். தெல்கி ஆபத்தான கட்டத்தில் இருந்தார். சில நாட்கள் முன்கூட்டியே அழைத்து வந்திருந்தால், தெல்கியை காப்பாற்றியிருக்கலாம் என வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தெல்கி இன்று உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications