மைனர் மகளை சீரழித்த தந்தைக்கு சிறை... பிறந்த குழந்தையை சிறையிலேயே பராமரிக்க உத்தரவு
போபால்: மத்தியப் பிரதேசத்தில் மைனர் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்த தந்தை சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். மேலும், அவர் மூலமாக மகளுக்குப் பிறந்த ஆண் குழந்தையையும் சிறை வளாகத்திலேயே அவர் பராமரிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மோரேனா மாவட்டம் ஜீம்னி கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் சிங். இவர் தனது மைனர் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அப்பெண்ணிற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
மூடி மறைக்கப் பட்ட இந்த விவகாரம் சில தொண்டு நிறுவனங்கள் மூலம் கடந்தவாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக விகாஸ் சிங் மீது வழக்கு தொடரப் பட்டது.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், விகாஸ் சிங்கை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. மேலும், அவருடைய மகள் மைனர் என்பதால், அவர் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.
இந்நிலையில், மகளின் ஆறு மாத ஆண் குழந்தையை பாதுகாப்பு மையத்தில் வைத்து பராமரிக்க இயலாது என்பதால், அக்குழந்தையை விகாஸ் சிங் சிறையில் வைத்து பராமரிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
எனவே, குழந்தையை சிறையில் பராமரிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் சிறை வளாகம் விகாஸ் சிங்கிற்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.