பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் அவசியம் இல்லை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!
டெல்லி: திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்ற தாய், தந்தை பெயரை சொல்லாமலேயே பிறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்களைப் பெற முடியும் என்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
திருமணமாகாமல் குழந்தை பெற்ற பெண் வாரிசுதாரரை நியமிக்கும் போது தந்தை பெயர் அவசியம் என்கிறது சட்ட நடைமுறைகள். இதை எதிர்த்து பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் அபய் மனோகர் சப்ரே அளித்த தீர்ப்பு:

குழந்தையின் தந்தை என்று கூறப்படும் மனிதர் தன்னுடைய குழந்தை பற்றி எந்த அக்கறையும் வெளிப்படுத்தவில்லை. அதுபோன்ற மனிதருக்கு தந்தை என்ற சட்டரீதியான அங்கீகாரம் அளிப்பதால் எந்தப் பயனும் இல்லை.
அப்படியான ஒரு தந்தையை ஒரு குடும்பத்தில் திணிப்பது சரியானது அல்ல.
இந்து மதத்தில் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் அக்குழந்தையை பெற்றெடுத்த உரிமையில் இயல்பாகவே அக்குழந்தையின் சட்டரீதியான பாதுகாவலர்களாக அங்கீகாரம் பெறுகின்றனர்.
குழந்தையின் தந்தை பெயரை அல்லது அடையாளத்தை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பதால் அக்குழந்தையின் நலனுக்கு எந்த பின்னடைவும் இல்லை.
இந்த குழந்தைக்கு 5 வயதாகியும் தந்தை பெயரை தெரிவிக்காததால் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
குழந்தையின் வாரிசுதாரர் சான்றிதழுக்கு மனுதாரர் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய சான்றிதழை வழங்க வேண்டும். குழந்தையின் தந்தை பெயர் அல்லது விவரங்களை கேட்டு வலியுறுத்தக்கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications