ராஜஸ்தானில் கொடூரம்.. 13 வயது மாணவியை 2 ஆண்டாக பலாத்காரம் செய்த பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு
ராஜஸ்தானில் சிறுமியை தனியார் பள்ளி ஆசிரியர்கள் 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்ததாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை மிரட்டி 2 ஆண்டுகளாக 8 ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவந்தது மருத்துவ பரிசோதனையின் போது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் உள்ள தனியார் பள்ளியில் 13 வயது மாணவி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாணவியை தனியாக அழைத்து சென்ற ஆசிரியர்கள் நிர்வாணமாக செல்போனில் வீடியோ படமெடுத்துள்ளனர்.
அதன் பின்னர் அவரை மிரட்டி 8 ஆசிரியர்கள் கூட்டாக பலாத்காரம் செய்த கொடூர சம்பம் நிகழ்ந்துள்ளது. இதனால் அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இதையறிந்த ஆசிரியர்கள் அவ்வப்போது மாத்திரைகளை கொடுத்து மாணவியின் கருவை கலைக்கவும் செய்துள்ளனர்.
தொடர்ந்து மாணவியை மிரட்டிய 8 ஆசிரியர்களும் சுமார் 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததால், மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவரின் பரிந்துரையில் மாணவிக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, அவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கடந்த வெள்ளிக்கிழமை அன்று போலீசில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி பயின்ற பள்ளியில் கடந்த ஆண்டு இந்த கொடூர சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், அவரது தந்தை தற்போதே புகார் அளிக்க முன்வந்துள்ளார்.
புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள ராஜஸ்தான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.