ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை – ”ஸ்னாப்டீல்” சி.இ.ஓ மீது வழக்குப்பதிவு
மும்பை: அரசிடம் உரிய அனுமதி பெறாமல் ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்ற ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குனால் பல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.
இணையவழி வர்த்தகமான ஆன்லைன் டிரேடிங்கில் கொடிகட்டி பறக்கும் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கடந்த மாதம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை உரிய அங்கீகாரம் பெற்ற மருந்து கடைக்காரர்கள் மட்டுமே விற்க முடியும் என்ற விதிமுறை உள்ளது.
இந்த விதிமுறையை மதிக்காமல் சில நிறுவனங்கள் ஏகப்பட்ட தள்ளுபடி விலையில் ஆன்லைன் மூலம் மருந்து மாத்திரைகளை விற்று வருவதாகவும், ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான ஸ்னாப்டீல் நிறுவனமும் இதற்கென தனி பட்டியலை வெளியிட்டு தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் மருந்து மாத்திரைகளை டெலிவரி செய்துவருவதாகவும் மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து, மும்பையில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவககத்தில் கடந்த மாதம் 16 ஆம் தேதி ரெய்டு நடத்திய அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
யார் யாரிடம் இருந்து அந்நிறுவனம் கொள்முதல் செய்கின்றது? அதற்கான ரசீதுகளின் விபரம். ஆன்லைன் மூலமாக மருந்து, மாத்திரைகளை வாங்கி பயன்படுத்திவந்த வாடிக்கையாளர்களின் பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்ற ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குனால் பல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications