அரசு நடவடிக்கையால் அச்சம்... போலி கல்வி சான்றிதழ் கொடுத்த 1,400 ஆசிரியர்கள் ராஜினாமா!
பாட்னா: பீகார் மாநிலத்தில் போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 1,400 ஆசிரியர்கள் அரசின் நடவடிக்கைக்கு அஞ்சி ராஜினாமா செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் பணியாற்றி வரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பலர் போலி கல்வி சான்றிதழ்கள் அளித்து பணியில் சேர்ந்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி நரசிம்ம ரெட்டி தலைமையிலான பெஞ்ச், கடும் நடவடிக்கையை தவிர்க்க போலி ஆசிரியர்கள் தாங்களாகவே பணியில் இருந்து விலக வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து போலி ஆசிரியர்கள் பணி விலக 8-ந் தேதி வரை மாநில கல்வி துறை கெடு விதித்தது. இந்நிலையில் போலி சான்றிதழ்கள் கொடுத்து தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த 1,400 ஆசிரியர்கள் ராஜினாமா செய்தது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கல்வி துறை முதன்மை செயலாளர் மகாஜன் கூறுகையில், கெடு முடிவதற்குள் மேலும் பலர் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். 8-ந் தேதிக்குள் ராஜினாமா செய்யாத போலி ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.