"பெங்களூரின் கூவத்தூர்".. சில நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது தெரியுமா?
பெங்களூர்: பெங்களூரின் கூவத்தூர் என்ற பெயரைப் பெற்றுள்ள பிடதி ஈகிள்டன் ரிசார்ட்டின் கதை பெரும் கதையாக இருக்கும் போல. இந்த ரிசார்ட்டை பாஜகவும் சரி, காங்கிரஸும் சரி பல காலமாகவே தங்களது இஷ்டத்திற்கு வளைத்து விளையாடி வருவது தெரியவருகிறது.
சென்னை அருகே கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அதிமுக அம்மா கட்சி எம்.எம்எல்ஏக்களை சசிகலா அடைத்து வைத்து ஆட்டம் காட்டியதை இந்தியாவே பார்த்து சிரித்தது. ஆனால் இன்று அதே ஸ்டைலை காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் நடத்தி வருகிறது.
பிடதியில் உள்ல ஈகிள்டன் ரிசார்ட்டில், குஜராத் எம்.எல்.ஏக்களை தங்க வைத்துள்ளது காங்கிரஸ் மேலிடம். கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார்தான் இவர்களை கட்டி மேய்க்கும் பொறுப்பை கையில் எடுத்துள்ளார்.
ஈகிள்டன் ரிசார்ட்
பிடதியில் உள்ளது இந்த ஈகிள்டன் ரிசார்ட். இந்த ரிசார்ட் கிட்டத்தட்ட 77 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வளைத்து வைத்துள்ளது. அங்குதான் ரிசார்ட் அமைந்துள்ளது. இதுதொடர்பாக சர்ச்சை நீடித்துக் கொண்டுள்ளது.
ஆந்திரா குரூப்
ஆந்திராவைச் சேர்ந்த மேதா அசோக் குமார் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமானது இந்த ரிசார்ட். அவர் தற்போது இறந்து விட்டார். அவரது மகன்கள் கிறண் குமார், சேத்தன் ஆகியோர் தற்போது இதை நடத்தி வருகின்றனர்.
அனுமதி கொடுத்ததே பாஜகதான்
உலகத் தரம் வாய்ந்த கோல்ப் மைதானத்துடன் கூடிய இந்த ரிசார்ட்டுக்கு கடந்த 2012ம் ஆண்டு அப்போதைய பாஜக அரசானது , ரிசார்ட் ஆக்கிரமித்து வைத்திருந்த 77 ஏக்கர் நிலத்தையும் ரூ. 82.69 கோடி அபராதத் தொகையை கட்டிய பிறகு திரும்ப ஒப்படைத்தது.
மீண்டும் சிக்கல்
பின்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் இந்த ரிசார்ட்டுக்கு சிக்கல் ஏற்பட்டது. குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இங்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு திடீரென ஒரு நோட்டீஸைப் பிறப்பித்தது காங்கிரஸ் அரசு.
ரூ. 982 கோடியை கட்டுங்க
உடனடியாக அபராதத் தொகை ரூ. 982 கோடியைக் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் 77 ஏக்கர் நிலத்தையும் அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர்தான் இங்கு கொண்டு வந்து குஜராத் எம்.எல்.ஏக்களை தங்க வைத்துள்ளனர்.
ஆக பாஜகவும் சரி, காங்கிரஸும் சரி தேவையான நேரத்தில் இந்த ரிசார்ட்டை வைத்து அங்கு டிராமா போட்டுக் கொண்டுள்ளன என்பது தெரிகிறது.