சந்திரசேகர ராவ் நடத்திய சண்டி மகா யாகப் பந்தலில் தீ விபத்தால் பதற்றம்- ஜனாதிபதி பங்கேற்பு ரத்து!
ஹைதராபாத்: உலக அமைதிக்காக தெலுங்கானாவின் மேடக் பகுதியில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நடத்திய ஆயுத சண்டி மகா யாகப் பந்தலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வது ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்துள்ள மேடக் மாவட்டம், எர்ரவள்ளி கிராமத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்குச் சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு, உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் மகா சண்டி யாகம் கடந்த புதன்கிழமை (23ஆம் தேதி) தொடங்கி ஐந்து நாள்களுக்கு நடைபெற்று வருகிறது.
தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் இந்த யாகத்தை நடத்தி வருகின்றனர். இன்றுடன் இந்த யாகம் முடிவடைகிறது.

பலகோடி மதிப்பீட்டில் ந.டைபெற்று வரும் இந்த யாகத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. ஆனால், இந்த யாகத்துக்கு அரசுப் பணம் எதுவும் செலவிடப்படவில்லை என்று சந்திரசேகர ராவ் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதற்கிடையே, இந்த யாகத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக ஆளுநர் ரோசைய்யா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தெலுங்கானா மற்றும் ஆந்திர ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பண்டாரு தத்தாத்ரேயா, காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்பராமி ரெட்டி, மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தலைவர் சிவபிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், யாகத்தின் இறுதி நாளான இன்று ஓமகுண்டத்தில் இருந்து பறந்த தீப்பொறி யாகசாலை பந்தலின் மீது பட்டதால் பந்தலின் ஒருபகுதியில் தீப்பற்றியது. இதைக் கண்டு யாகம் நடத்திகொண்டிருந்த பூசாரிகளும், பொதுமக்களும் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த மீட்புபடையினர் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த தீவிபத்தில் யாருக்கும் காயமில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
ஆனபோதும், முன்னதாக அறிவிக்கப்பட்டபடி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார். அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று காலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த யாகத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு பூரண கும்பமரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் இந்த யாகத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications