2010ல் நடந்த டெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கு- 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!
டெல்லி: டெல்லியில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லி தவுலாகான் பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் 30 வயது வடகிழக்கு மாநில பெண் ஒருவர் வேலைபார்த்து வந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி அவர் வேலை முடிந்து தனது நண்பருடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பெண்ணை மோங்கோல்புரி என்ற இடத்துக்கு கடத்திச் சென்று 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்தது.
இதுதொடர்பாக போலீசார் உஸ்மான், சம்ஷத், ஷாத், இக்பால், கம்ருதீன் ஆகிய 5 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வீரேந்தர்பட் கடத்தல், பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட பல பிரிவுகளின் கீழ் 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்களை 17 ஆம் தேதி அறிவிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.