நீச்சலடிக்க சென்ற இன்ஜினியரிங் மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி சாவு! பெங்களூருவில் சோகம்
பெங்களூரு: நீச்சலடிக்க சென்ற இன்ஜினியரிங் மாணவர்கள் ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெங்களூரு நகரில் நடந்துள்ளது.
பெங்களூரு, வடகிழக்கு பகுதியில் தேவனஹள்ளி அருகே உள்ளது பெட்டஹலசூரு பகுதி. இங்கு, கல் குவாரி தோண்டப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் அந்த பள்ளத்தில், நீர் தேங்கியுள்ளது. எனவே, இதை ஏரி போல அப்பகுதி இளைஞர்கல் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு ரேவனசித்தேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 8 பேர் இன்று அங்கு குளிக்க சென்றுள்ளனர். அதில் 3 பேருக்கு நீச்சல் வராத காரணத்தால், பாக்கி, 5 பேர் மட்டும் நீரில் இறங்கி நீச்சலடிக்க ஆரம்பித்துள்ளனர்.
அப்போது மாணவர்களில் ஒருவர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அவரை பிற மாணவர்கள் காப்பாற்ற முயன்றபோது ஒருவர் பின் ஒருவராக ஐந்து மாணவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து பிற மாணவர்கள் தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, ஐந்து பேருமே நீருக்குள் மூழ்கியது தெரியவந்தது. உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு, அம்பேத்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
மாணவர்கள் குளித்த பகுதி சுமார் 60 அடி ஆழம் உள்ளது என்பதால், ஒருவரையும் காப்பாற்ற முடியவில்லை என்று சம்பவ இடத்தில் பரிசீலனை நடத்திய, போலீஸ் துணை கமிஷனர் விகாஸ் குமார் தெரிவித்தார். உயிரிழந்த அனைவருமே, பிஇ எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் 4வது செமஸ்டர் மாணவர்களாகும்.
இதில் ராஜேஷ், கெம்ப்பாட்டில் ஆகியோர் நேபாள நாட்டை சேர்ந்த மாணவர்கள் என்று கூறப்படுகிறது. மற்ற மூவரும், பெங்களூரை சேர்ந்தவர்கள். வித்யாரண்யபுராவை சேர்ந்த அருண் சந்திரசேகர், ஆர்டி நகரை சேர்ந்த
ஹரீஷ், பேட்டராயனபுராவை சேர்ந்த நந்தகுமார் ஆகியோர்தான் மற்ற மூவராகும். இதுகுறித்து சிக்கஜாலா போலீசார் விசாரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications