சித்தூர் மேயர், கணவர் கொலை வழக்கு! 5 பேருக்கு தூக்கு தண்டனை! சித்தூர் நீதிமன்றம் அதிரடி
சித்தூர்: ஆந்திரா மாநிலம் சித்தூர் மேயர் மற்றும் அவரது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சித்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 10 ஆண்டுகள் கழித்து இந்த இரட்டை கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை உறவினர்கள் வரவேற்கிறார்கள்.
கடந்த 2015ஆம் ஆண்டு சித்தூர் மேயராக இருந்த அனுராதாவின் அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அனுராதாவை சுட்டுக் கொன்றனர். அது போல் தெலுங்கு தேசம் கட்சியின் மாவட்ட துணைத் தலைவராக இருந்த அனுராதாவின் கணவர் கட்டாரி மோகனை அந்த கும்பல் கத்தியால் குத்தியது.

இவர் மீது 2007 ஆம் ஆண்டே கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதில் அவர் உயிர் தப்பினார். இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு மனைவி அனுராதாவின் அலுவலகத்தில் இருந்த போது பர்தா உடை அணிந்துக் கொண்டு 5 பேர் கொண்ட கும்பல் கணவரை கத்தியால் குத்திவிட்டு, அனுராதாவை துப்பாக்கியால் சுட்டது.
இதில் இருவரும் பலியாகிவிட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போது குடும்பத்தில் நிலவி வந்த முன்பகை காரணமாக இந்த கொலைகள் நடந்ததாக சொல்லப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த இரட்டை கொலை தொடர்பாக மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர். 122 பேர் சாட்சியங்களாக விசாரிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் குற்றவாளிகள் என கடந்த 24 ஆம் தேதி சித்தூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில் மற்றவர்களை விடுதலை செய்தும் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று தீர்ப்பு விவரங்களை நீதிமன்றம் வெளியிட்டது. அதில் சந்திரசேகர் (மோகனின் உறவினர்), முல்பாகல் வெங்கடேஷ் , ஜெயப்பிரகாஷ் ரெட்டி, மஞ்சுநாத், வெங்கடேஷ் ஆகிய 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சீனிவாசராவ் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த தீர்ப்பால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க சித்தூர் நகரம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications