2 பெண்கள், 1 சிறுமி உட்பட தமிழக கூலித் தொழிலாளிகள் 5 பேர் கர்நாடகாவில் வெட்டிக்கொலை
சாம்ராஜ்நகர்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், தமிழகத்தில் இருந்து சென்ற ஐந்து கூலித்தொழிலாளர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் பெண்கள், ஒரு சிறுமியும் அடங்குவர்.
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் (35), சிவம்மா (35), ராஜம்மா (35), காசி (40), ரோஜா (11) ஆகிய ஐந்து பேரும் கொலை செய்யப்பட்டவர்களாகும். சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் அருகேயுள்ள ஹராலே என்ற கிராமத்தில் இச்சம்பவம் நேற்று நள்ளிரவில் நடந்துள்ளது.

உயிரிழந்த அனைவரும், கரும்பு வெட்டும் தொழிலாளிகளாகும். இவர்களையும், மேலும் சுமார் 20 பேரையும், தமிழகத்தில் இருந்து ராஜேந்திரன், கரும்பு வெட்ட கூட்டி வந்துள்ளார். கரும்பு தோட்ட உரிமையாளர்கள், ராஜேந்திரனிடம் பணத்தை கொடுப்பதும், ராஜேந்திரன் பிற தொழிலாளர்களுக்கு பணத்தை பகிர்ந்து கொடுப்பதும் வழக்கம்.
இந்நிலையில், ராஜேந்திரன் அளிக்கும் பணத்தில் முறைகேடு செய்வதாக கூறி பிற தொழிலாளிகள் தகராறு செய்து வந்துள்ளனர். நேற்று நள்ளிரவில் இந்த தகராறு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஆத்திரமடைந்த சுமார் 15 தொழிலாளிகள் ஒன்று சேர்ந்துதான் ராஜேந்திரனையும், அவரது குடும்பத்தாரையும் வெட்டி கொலை செய்துவிட்டு தருமபுரி மாவட்டத்துக்கே தப்பியோடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், ராஜேந்திரனின், மர்ம உறுப்பு வெட்டப்பட்டுள்ளது. எனவே, கள்ளத்தொடர்பு விவகாரமும் இதில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
துணை டிஎஸ்பி வெங்டசாமியிடம் இதுகுறித்து கேட்டதற்கு, "பணத்தகராறு மட்டுமின்றி, வேறு பிரச்சினைக்காகவும் இக்கொலைகள் நடந்திருப்பது போல தெரிகிறது. அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம்" என்றார். தமிழக தொழிலாளிகள் தங்களுக்குள்ளே சண்டை போட்டு கொலை செய்யப்பட்டிருப்பது சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications