5 தமிழர்களும் நீரில் மூழ்கிதான் இறந்தனர், அடித்ததற்கான தடயங்கள் இல்லை.. மருத்துவர் விளக்கம்
கடப்பா ஏரியில் மூழ்கிதான் ஐந்து தமிழர்களும் உயிரிழந்தனர் என ஆந்திர அரசு மருத்துவர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடப்பா: 5 தமிழர்களும் ஏரியில் மூழ்கிதான் உயிரிழந்தனர் என ஆந்திர அரசு மருத்துவர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செம்மரம் வெட்டிக்கடத்தியவர்களை போலீசார் விரட்டியபோது அவர்கள் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆந்திர போலீசாரே அடித்துக்கொன்று 5 பேரின் உடல்களையும் ஏரியில் வீசியதாக தமிழ் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
உடல்கள் பிரேத பரிசோதனை
இந்நிலையில் 5 பேரின் உடல்களும் ஆந்திர மாநிலம் கடப்பா அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஆனந்த்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
நீரில் மூழ்கிதான் இறந்தனர்
அப்போது 5 பேரும் நீரில் மூழ்கிதான் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார். மேலும் 5 பேரின் உடலிலும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
எந்த தடயமும் இல்லை
3 நாட்கள் நீரில் மூழ்கியிருந்ததால் உடல்கள் அழுகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அடித்து துன்புறுத்தியதற்கான எந்த தடயங்களும் 5 பேரின் உடல்களிலும் இல்லை என்றும் மருத்துவர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.
சேலத்தை சேர்ந்தவர்கள்
இந்நிலையில் உயிரிழந்த 5 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் அடியனூரைச் சேர்ந்த முருகேசன், கீழ்ஆவாரை கருப்பணன் உடல்கள் என உறுதிப்படுத்தப்பட்டன, மேலும் ஜெயராஜ், முருகேசன், சின்னபையன் ஆகிய மூன்று பேரும் கருமந்துறையை சேர்ந்தவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.