வட மாநிலங்களில் கனமழை... கங்கையில் வெள்ளம்.. வெள்ளத்தில் மிதக்கும் ஆயிரம் கிராமங்கள்!
பாட்னா: வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கங்கை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைகளை உடைத்துக் கொண்டு கிராமப் பகுதிகளில் புகுந்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஓடும் கங்கை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி செல்வதால், பல இடங்களில் கரையை உடைத்துக் கொண்டு வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால், 12 மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் வழங்கி வருவதாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதனிடையே, மாநில துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் தமது தந்தையான லாலு பிரசாத்துடன் வெள்ளம் பாதித்த இடங்களை வான்வழியாக ஆய்வு செய்தார்.

உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரகாண்ட் மாநிலத்திலும் மழை வெள்ளத்தால் ஏராளமான பொதுமக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் பல லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலங்களில், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications