சொன்னதைச் செய்தீர்களா... செய்யலையா... இனியாவது செய்வீர்களா... இது அருண் ஜெட்லிக்கு!
டெல்லி: திட்டங்கள் பரபரப்பாக அறிவிக்கப்படுவது மட்டும் முக்கியமல்ல, அவற்றை சொன்னபடி நிறைவேற்றுவதிலும் அரசின் பங்கு இன்றியமையாதது.
அப்படியாக ஆண்டுதோறும் பட்ஜெட் சமயத்தில் பல்வேறு திட்டங்கள் கண்ணைக் கவரும் வகையில் அறிவிக்கப்படுகின்றன. அதனைக் கேட்டு அப்போதைக்கு மக்கள் சந்தோஷப்பட்டால் மட்டும் போதுமா? அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவற்றின் பலன்களை மக்கள் ருசி பார்க்க வேண்டும் அல்லவா.
அந்தவகையில், மத்திய பட்ஜெட் வருகிற 29-ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.
இந்த சூழ்நிலையில் கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் சொன்னபடி நிறைவேற்றப்பட்டு விட்டதா என்ற கேள்வி நம்முன் நிற்கிறது.

எய்ம்ஸ்...
கடந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு, பஞ்சாப், அஸ்ஸாம், காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என அருண் ஜெட்லி அறிவித்திருந்தார். இதன்படி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இழுபறி...
செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, செங்கிப்பட்டி (தஞ்சாவூர்), பெருந்துறை ஆகிய ஐந்து இடங்களில் ஏதேனும் ஒன்றில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, அங்கு மத்தியக் குழுவினர் ஆய்வும் நடத்தினர். ஆனால், இதில் எந்த ஒரு இடமும் இறுதிச் செய்யப்படவில்லை.மற்ற சில மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான இடம் இறுதி செய்யப்பட்டு, அங்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இன்னும் இழுபறி நிலையே நீடிக்கிறது.

கறுப்புப் பணம்...
இதேபோல், வெளிநாடுகளில் கறுப்புப் பணம் குவிப்பதை ஒழிக்க ஒரு சட்டமும், உள்நாட்டில் பினாமிகள் பெயரில் கறுப்புப் பணத்தை குவிப்பதை ஒடுக்க மற்றொரு சட்டமும் இயற்றப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார் அருண் ஜெட்லி. இந்த சட்டத்தின்படி வெளிநாடுகளில் சொத்துக்கள், கறுப்புப் பணம் குவித்து, அதை மறைத்து, வரி ஏய்ப்பு செய்தால் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இடியாப்ப சிக்கல்...
ஆனால், இந்த அறிவிப்பு இன்னும் அடுத்தகட்டத்திற்கு செல்லவில்லை. மத்திய அரசு கூறியபடி கருப்பு பண முதலைகளை கண்டுபிடிப்பதிலேயே இடியாப்ப சிக்கல் காணப்படுகிறது. இதில் எங்கே அவர்களுக்கு தண்டனைகள் வழங்குவது என்ற அலட்சியம் காணப்படுவது கண்கூடாகத் தெரிகிறது.

பினாமி பேரில் சொத்துக்கள்...
பினாமி பேரில் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், இது குறித்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தார் ஜெட்லி. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், மேற்கூறிய மற்ற திட்டங்களைப் போலவே இந்தத் திட்டமும் வெறும் அறிவிப்பு என்ற நிலையிலேயே தேங்கிக் கிடக்கிறது.

செயல் ‘திட்டங்கள்’ தேவை...
தேர்தல் நேர வாக்குறுதிகள் போல் அல்லாமல், அரசின் திட்டங்களும் அறிவிப்பு என்ற நிலையில் இருந்து, செயல் என்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். ஆனால், வெறும் அறிவிப்புகளோடு இத்தகைய திட்டங்கள் முடக்கப்பட்டால், ஆளும் அரசு மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வளரும். மத்தியிலோ, மாநிலத்திலோ இதை ஆளும் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.












Click it and Unblock the Notifications