தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை! எம்.பி. பதவியை இழந்தார்!
ராஞ்சி: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் லாலு பிரசாத் தமது எம்.பி. பதவியை இழந்துள்ளார்.
1990களில் லாலு பிரசாத் முதல்வராக பதவி வகித்த காலத்தில் ரூ37.7 கோடிக்கு தீவன கொள்முதலில் முறைகேடு நடந்தது என்பது வழக்கு. கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஊழல் வழக்கில் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 30ந் தேதி பீகார் முன்னாள் முதலமைச்சர்கள் லாலுபிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 45 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு வெளியானதும் லாலுபிரசாத் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோருக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை விதிப்பது என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதிகபட்ச தண்டனை- சிபிஐ
இதைத் தொடர்ந்து இன்று காலை எத்தனை ஆண்டுகாலம் தண்டனை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சிபிஐ தரப்பில் அதிகபட்சம் 7 ஆண்டுகால தண்டனை விதிக்க வாதிடப்பட்டது.
நோய்கள் இருக்கு.. குறைவான தண்டனை- லாலு
ஆனால் லாலு தரப்பிலோ ஏகப்பட்ட நோய்கள் அவருக்கு இருப்பதால் குறைந்த கால தண்டனை வழங்கக் கோரியிருந்தனர்.
5 ஆண்டு சிறை
இதைத் தொடர்ந்து வீடியோகான்பரன்ஸ் மூலம் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் ரூ25 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜெகநாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு
இந்த வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
எம்.பி. பதவி இழப்பு
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 2 ஆண்டுக்கும் மேல் தண்டனை பெற்றால் எம்.பி. எம்.எல்.ஏ பதவி வகிக்க முடியாது. தற்போது லாலுவுக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் தமது லோக்சபா எம்.பி. பதவியை இழக்கிறார். அத்துடன் 6 ஆண்டுகாலத்துக்கு லாலு தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஏற்கெனவே ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ராஜ்யசபா எம்.பி. ரஷீத் மசூத் தமது பதவியை இழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications