“புல் ஃபோர்ஸ்”.. காங்கிரஸின் 20 ஆண்டு பழைய “மாடல்”.. குஜராத்தில் பாஜக கையில் எடுத்த “அஸ்திரம்”
காந்திநகர்: குஜராத் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு காங்கிரஸ் கையில் எடுத்த மாடலை தற்போது பாஜக குஜராத்தில் செயல்படுத்தி இருக்கிறது. அது என்ன மாடல்? இதற்கு பயன்கிடைக்குமா? என்பதை விரிவாக பார்ப்போம்.
2024 லோக் சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குஜராத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் தேர்தல் அதற்கான முன்னோட்டமாக பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.
வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற்று தேர்தல்கள் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
நீ டெல்லில இருக்கலாம்! உன் குடும்ப கடலூர்லதானே இருக்கு! ராணுவ வீரருக்கு விசிக பிரமுகர் கொலை மிரட்டல்
காங்கிரஸ் மாடல்
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் மாநிலமான குஜராத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் கவுரவ பிரச்சனையாக இருக்கிறது. இதில் வென்றால் குஜராத்தில் 24 ஆண்டுகால பாஜக ஆட்சியை தொடர்ந்து அக்கட்சி சாதனை படைக்கும். எனவே இதில் வெற்றி பெற 20 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் பயன்படுத்திய பழைய மாடலையில் கையில் எடுத்து இருக்கிறது காங்கிரஸ்.
2002 குஜராத் தேர்தல்
கடந்த டிசம்பர் 2002 ஆம் ஆண்டு காங்கிரஸ் வலுவான கட்சியாக இருந்த காலம். அப்போது பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. அந்த நேரத்தில் குஜராத் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் மதக்கலவரம், அக்ஷர்தான் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்த சமயம் அது என்பதால் குஜராத் தேர்தல் முடிவுகளை இந்தியாவே உற்று கவனித்து வந்தது.
இந்துக்களின் மனதை ஆள்பவர்
அப்போது இந்துக்களின் மனதை ஆள்பவர் என்ற பெருமையை பெற்று இருந்தார், குஜராத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி. மாநிலம் முழுவதும் அந்த சமயத்தில் யாத்திரை மேற்கொண்ட நரேந்திர மோடி ஆற்றிய பெரும்பான்மையான உரைகள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இத்தாலி பூர்வீகம், சிறுபான்மையினருக்கு எதிராக அமைந்ததாக விமர்சிக்கப்பட்டது.
காங்கிரஸ் இறக்கிய படை
அதே சமயம் பாஜக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற முனைப்போடு காங்கிரஸ் களமிறங்கியது. அப்போது காங்கிரஸின் மாநில முதலமைச்சராக இருந்த ராஜஸ்தானின் அசோக் கெலாட், மகாராஷ்டிராவின் விலாஸ்ராவ் தேஷ்முக், கர்நாடகாவின் எஸ்.எம்.கிருஷ்ணா, சத்தீஸ்கரின் அஜித் ஜோகி, மத்திய பிரதேசத்தின் திக் விஜய் சிங், டெல்லியின் ஷீலா தீட்சித் ஆகியோர் குஜராத்தில் பிரச்சாரம் செய்ய வந்தனர்.
தோல்வி மாடல்
அவர்களுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் குஜராத்தில் திரண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், அந்த முயற்சி காங்கிரஸுக்கு பெரிய பயனை கொடுக்கவில்லை. அக்கட்சி வெறும் 51 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. அதில் 2 தொகுதிகள் சுயேட்சைகளுக்கும், 2 தொகுதிகள் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் சென்றன.
பாஜக வெற்றி
அதே நேரம் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக 182 தொகுதிகளில் 127 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைத்தது. காங்கிரஸின் இந்த தோல்வி மாடலை பாஜக தற்போது கையில் எடுத்து பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
பயன் கிடைக்குமா?
அதேபோல் பாஜகவை சேர்ந்த பிற மாநில முதலமைச்சர்கள், மத்திய கேபினட் அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என அனைவரையும் மொத்தமாக குஜராத்தில் இறங்கி பவர் காட்டி வருகிறது அக்கட்சி. இதனால் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. ஆனால், இது பயனளிக்குமார் என்பதை டிசம்பர் 8 ஆம் தேதி வரை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.