மேகியை அடுத்து பாக்கெட் பால், நீர், எண்ணெய் பக்கம் திரும்பிய எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.
டெல்லி: நாடு முழுவதும் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால், தண்ணீர் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் தரத்தை பரிசோதனை செய்யுமாறு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால், தண்ணீர் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் தரத்தை பரிசோதனை செய்யுமாறும், அதன் விற்பனையை கண்காணிக்குமாறும் உணவு பாதுகாப்பு கமிஷனர்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
உணவு பாதுகாப்பு கமிஷனர்கள் பாக்கெட் பால், தண்ணீர், எண்ணெய் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைக்க வேண்டும். மேகி நூடுல்ஸ் விவகாரத்தை அடுத்து பிற பிராண்ட் நூடுல்ஸ், பாஸ்தா, மேக்ரூனி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம்.
இந்நிலையில் தான் பாக்கெட், பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பால், தண்ணீர் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிராண்டுகள் என்று இல்லாமல் அனைத்து பிராண்ட் பொருட்களையும் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் சட்டப்படி உணவு பொருட்களை பாக்கெட் செய்யாமல் பொய்யானவற்றை கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு கவலை அளித்துள்ளது.