இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது.. மம்தா கடும் தாக்கு
கொல்கத்தா: இந்தியாவில் கடந்த 5 வருடங்களாக சூப்பர் எமர்ஜென்சி அமலில் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியால் இந்தியாவில் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அன்றுதான் அவசரநிலை நமது நாட்டில் பிரகடனப் படுத்தப்பட்டது. அவசரநிலை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பரிந்துரையை ஏற்ற அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். இதனால் 21 மாதங்கள் அவசர நிலை நடைமுறையில் இருந்தது. 1975-ம் ஆண்டு 25-ம் தேதியில் இருந்து 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி நாட்டில் அவசர நிலை நடைமுறையில் இருந்தது.
இந்த அவசரநிலை நடைமுறையில் இருந்த 21 மாதங்களில் நாட்டில் தேர்தல்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை. மக்களின் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. எதிர்த்தவர்கள் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியையும், அவசர நிலையையையும் எதிர்த்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிக்கைகள் செய்தி வெளியிட கூட அனுமதிக்கப்படவில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நடந்தன.
எமர்ஜென்சி தினம் இன்று அனுசரிக்கப்படும் சூழலில் எமர்ஜென்சி தினத்தை நினைவுபடுத்தி மம்தா பானர்ஜி டிவீட் செய்துள்ளார். அந்தப் பதிவில் எமர்ஜென்சியை விட கடந்த 5 ஆண்டுகள் மோசமானது. கடந்த 5 ஆண்டுகள் சூப்பர் எமர்ஜென்சியை நாடு சந்தித்து உள்ளது. வரலாற்றில் இருந்து நாம் படிப்பினைகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க போராட வேண்டும் என கூறி உள்ளார்.