பெங்களூருவில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கழுத்து நெரித்து கொலை
பெங்களூரு: ஓய்வு பெற்ற விமான படை அதிகாரி வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் புறநகரான உஸ்கூர் பகுதியில் உள்ள ஒரு வில்லா குடியிருப்பில் வசித்தவர் 70 வயதான பர்வேஸ் கோகர். இவர் இந்திய விமானப் படையின் ஓய்வு பெற்ற அதிகாரியாகும்.
நேற்று முன்தினம் இரவு, பர்வேஸ் ஒரு படுக்கையறையிலும், அவரது மனைவி மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர். நேற்று காலையில் பர்வேசின் மனைவி எழுந்து பார்த்தபோது, பர்வேஸ் அறை கதவு பூட்டப்பட்டிருப்பது தெரிந்துள்ளது. கதவை தட்டிப் பார்த்தும் பதில் வராததால் சந்தேகமடைந்த அவர், பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் கதவை உடைத்துள்ளார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பர்வேஸ் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பரிசீலனை நடத்தினர். கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். கழுத்தை நெரித்து கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
பூட்டிய வீட்டுக்குள் எப்படி கொலையாளிகள் வந்தனர், எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து மர்மம் நீடிக்கிறது.