ஆந்திராவில் எகிறும் டென்ஷன்.. சந்திரபாபு நாயுடு விடுவிக்கப்படுவாரா? ஜாமீன் கோரி உடனே மனு தாக்கல்
அமராவதி: திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் ஜாமீன் கோரி உடனடியாக இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். நேற்று காலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விடிய விடிய நடைபெற்ற விசாரணை இன்று அதிகாலை 3.15 மணி வரை நீடித்தது. பின்னர் கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு, நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது வரும் 22 ஆம் தேதி அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து சந்திரபாபு நாயுடு, ராஜ முந்திரி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே சந்திர பாபு தரப்பில் இரண்டு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உடல் நிலையை காரணம் காட்டி ஒரு மனுவும், வீட்டிலேயே இருப்பதாக ஒரு மனுவும் என இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications