தேசத்திற்காக அன்று கோல் மழை.. இன்று தீவிரவாதிகளை சுட்டுத் தள்ளி தூள் ... மாஜி ஹாக்கி ஸ்டார் ஜுக்ராஜ்
குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில், சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்தபோது அங்கு சென்ற போலீஸ் படையில் இடம் பெற்று 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற அதிகாரிகளில் ஒருவராக ஜுக்ராஜ் சிங்கும் இடம் பெற்றுள்ளார். இவர் ஒரு காலத்தி்ல் இந்திய ஹாக்கி அணியில் நட்சத்திர வீரராக இருந்தவர் ஆவார்.
சமீபத்தில் குர்தாஸ்பூரில் உள்ள தினாநகரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து அட்டகாசம் செய்தனர். இதை ஒடுக்கச் சென்ற படையில் முக்கியமானவராக இடம் பெற்றிருந்தவர்தான் ஜுக்ராஜ் சிங்.

32 வயதான சிங், முன்பு இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த முக்கிய நட்சத்திர வீரர் ஆவார். பெனால்டி கார்னர் ஷாட்களை அடிப்பதில் கை தேர்ந்தவர். இந்தியாவின் நட்சத்திர வீரராக இருந்தவர். தற்போது இவர் அமிர்தசரஸ் மாவட்டத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார்.
அருகில் உள்ள குர்தாஸ்பூரில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தின்போது அருகாமை மாவட்டங்களிலிருந்து பல போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அப்படி வந்து தீரமாக செயல்பட்டவர்தான் ஜுக்ராஜ் சிங்.
இதுகுறித்து ஜுக்ராஜ் சிங் கூறுகையில், ‘எங்களுக்கு தகவல் கிடைத்ததும் கிளம்பி விட்டோம். தீவிரவாதிகளை ஒடுக்காமல் திரும்ப மாட்டோம் என்று சபதம் செய்து கிளம்பினோம்.
காலை எட்டே கால் மணிக்கு நாங்கள் தினா நகர் போய் விட்டோம். பின்னர் தாக்குதலை ஆரம்பித்தோம்' என்றார்.
12 வருடங்களுக்கு முன்பு ஜலந்தரில் நடந்த கார் விபத்தில் உயிர் தப்பியவர் ஜுக்ராஜ் சிங். இவர் தீவிரவாதிகளின் மறைவிடத்தில் பல முறை துப்பாக்கியால் சுட்டு அவர்கள் வெளி வர உதவியுள்ளார்.
கிட்டத்தட்ட 10 மணி நேரம் நடந்த கடும் சண்டையின் இறுதியில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லபப்ட்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications