முன்னாள் பிரதமர் வாஜ்பாயி மருமகள் கருணா சுக்லா கொரோனாவுக்கு பலி
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மருமகளும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கருணா சுக்லா கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 70.
ராய்பூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா சுக்லா கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 70. இவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் மருமகள் ஆவார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடி பேராக உயரப்போகிறது. தினசரியும் மூன்றரை லட்சம் பேர் பாதிக்கப்படுவதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 28 லட்சம் பேராக அதிகரித்துள்ளது.

ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மருமகள் கருணா சுக்லாவும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த கருணா சுக்லா, கட்சியில் ஓரங்கட்டப்பட்ட காரணத்தால் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரசில் இணைந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தலில் முதல்வர் ரமன் சிங்கை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
70 வயதான கருணா சுக்லாவிற்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ராய்பூரில் உள்ள ராமாகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலையில் அவர் உயிரிழந்தார். இறுதி சடங்குகள் இன்று பலோதபஜாரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications